இடஒதுக்கீட்டிற்கு எதிரான உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பைக் கண்டிக்கும் வகையில் சென்னையில் அரசு ஊழியர் ஐக்கிய பேரவை சாா்பில் ஆர்ப்பாட்டம் நடத்த இருப்பதாக விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமா தெரிவித்துள்ளார்.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

இதுதொடர்பாக இன்று அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் அவர் குறிப்பிடுகையில்., "உச்சநீதிமன்றத்தின் இடஒதுக்கீட்டிற்கு எதிரான தீர்ப்பைக் கண்டிக்கும் வகையிலும், அதனை எதிர்த்து சீராய்வு மனு (Review Petition) தாக்கல் செய்ய வேண்டும் என்று மத்திய அரசை வலியுறுத்துகிற வகையிலும் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் சார்பில் அரசு ஊழியர் ஐக்கியப் பேரவையின் சார்பில் அனைத்து மாவட்ட தலைநகரங்களிலும் ஆர்ப்பாட்டங்களை நடத்த திட்டமிட்டிருக்கிறோம்.


முதற்கட்டமாக வருகிற மார்ச் 7-ம் தேதி சென்னையில் அரசு ஊழியர் ஐக்கிய பேரவை சாா்பில் ஆர்ப்பாட்டம் நடைபெறும்." என குறிப்பிட்டுள்ளார்.



முன்னதாக கடந்த 2012-ம் ஆண்டு உத்தரகாண்ட் மாநில காங்கிரஸ் அரசு, மாநில அரசுப் பணிகளில் SC- ST பிரிவினருக்கு இடஒதுக்கீடு வழங்காமலேயே காலிப்பணியிடங்களை நிரப்பியது. இதைத்தொடர்ந்து 2017-ஆம் ஆண்டு ஆட்சிக்கு வந்த பாஜக அரசும், காங்கிரஸ் அரசின் உத்தரவையே நடைமுறைப்படுத்தியது. 
இந்நிலையில் இவ்விரு அரசுகளின் செயல்பாட்டால் பாதிக்கப்பட்டவர்கள், மாநில உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்தனர். இந்த வழக்கில் அரசின் உத்தரவை ரத்துசெய்ததுடன், இடஒதுக்கீட்டைப் பின்பற்றும்படியும் உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது.


உயர்நீதிமன்ற தீர்ப்பை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தது உத்தரகாண்ட் மாநில பாஜக அரசு. அந்த வழக்கை விசாரித்த உச்சநீதிமன்றம் மாநில அரசுப் பணி நியமனங்களில் இடஒதுக்கீடு கட்டாயமில்லை என்று தெரிவித்தது. உச்ச நீதிமன்றத்தின் இந்த தீர்ப்பு நாட்டையே அதிரவைத்திருக்கிறது. மேலும் இது பல்வேறு தரப்பினரிடையே கடும் விமர்சனங்களை எழுப்பியது குறிப்பிடத்தக்கது.