COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING


வேலூர்: நடந்து முடிந்த 17 ஆவது மக்களவை தேர்தலின் போது தமிழகத்தில் 39 மக்களவைத் தொகுதிகளில் ஒன்றான வேலூர் நாடாளுமன்ற தொகுதியில் அதிக அளவில் பணம் விநியோகம் செய்யப்படுகிறது. அதற்க்காக பல இடங்களில் பணம் பதுக்கி வைக்கப்பட்டு உள்ளது என தேர்தல் ஆணையத்துக்கு புகார் வந்தது. இதனையடுத்து தேடுதல் வேட்டையில் ஈடுபட்ட அதிகாரிகள் கட்டுகட்டாக பணம் கைப்பற்றினர். இதனைத் தொடர்ந்து வேலுார் தொகுதிக்கான தேர்தல் மட்டும் ரத்து செய்யப்பட்டது. மீதமுள்ள 38 மக்களவைத் தொகுதிக்கும் தேர்தல் நடத்தப்பட்டது. அதில் 37 தொகுதியில் திமுக கூட்டணியும், ஒரு இடத்தில் அதிமுகவும் வெற்றி பெற்றனர். 


வரும் ஆகஸ்ட் 5 ஆம் தேதி வேலூர் தொகுதிக்கு மக்களவை தேர்தல் நடைபெறும் என இந்திய தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. இதற்கான வேட்புமனுத் தாக்கல் ஜூலை 11 ஆம் தேதி தொடங்கி ஜூலை 18 ஆம் தேதி நிறைவடைந்தது. கடந்த வெள்ளிக்கிழமை வேட்பு மனுக்கள் மீது பரிசீலனை நடைபெற்றது. அ.தி.மு.க. கூட்டணி வேட்பாளர் ஏ.சி. சண்முகம், தி.மு.க. வேட்பாளர் கதிர் ஆனந்த், நாம் தமிழர் வேட்பாளர் உட்பட சுயேச்சைகள் வேட்புமனுக்கள் ஏற்றுக் கொள்ளப்பட்டன.


இந்தநிலையில், இன்று மாலை வேலூர் நாடாளுமன்ற தொகுதிக்கான இறுதி செய்யப்பட்ட வேட்பாளர்கள் பட்டியல் அறிவிக்கப்படும் என்று தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாஹூ அறிவித்துள்ளார். அதுமட்டுமில்லாமல் தேர்தல் நடைபெறும் அனைத்து வாக்குச்சாவடிகளிலும் ஒப்புகைச்சீட்டு இயந்திரம் பயன்படுத்தப்படும் என்றும் அவர் அறிவித்துள்ளார்.