எதிர்வரும் மக்களவை தேர்தலில் சிதம்பரம் தொகுதியில் இருந்து விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன் போட்டியிடுகிறார்!


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

திமுக தலைமையிலான மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணியில் இடம் பிடித்துள்ள விடுதலை சிறுத்தைகள் கட்சி, சிதம்பரம் மற்றும் விழுப்புரம் ஆகிய 2 மக்களவை தொகுதிகளில் போட்டியிடுகிறது. இந்த இரண்டு தொகுதிகளில் விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில் போட்டியிடும் வேட்பாளர்கள் பட்டியலை இன்று அக்கட்சி தலைவர் தொல் திருமாவளவன் வெளியிட்டார். 


அதன்படி சிதம்பரத்தில் அக்கட்சியின் தலைவர் திருமாவளவன் போட்டியிடுகிறார். திருமாவளவன் தனிச்சின்னத்தில் போட்டியிடுகிறார். 


விழுப்புரம் தொகுதியில் ரவிக்குமார் போட்டியிடுகிறார். ரவிக்குமார் உதயசூரியன் சின்னத்தில் போட்டியிடுவார் என தெரிவிக்கப்பட்டுள்ளது.


மேலும் தமிழகத்தை தவிர கேரளா மற்றும் ஆந்திராவிலும் விடுதலை சிறுத்தைகள் கட்சி போட்டியிடுகிறது. கேரளா மற்றும் ஆந்திராவில் தனிச்சின்னத்தில் தனித்து போட்டியிடுவதாக அறிவித்துள்ளது.


ஆந்திராவை பொருத்தமட்டில் விடுதலை சிறுத்தைகள் கட்சி 6 தொகுதிகளில் போட்டியிடுவதாக அறிவித்துள்ளது. அதன்படி குண்டூர் தொகுதியில் ஆந்திர விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் ஜேகப் வித்யாசாகர் போட்டியிடுகின்றார். சித்தூரில் சிவப்பிரசாத், விசாகப்பட்டினத்தில் ஜார்ஜ் வங்காரி, திருப்பதியில் முருகேசன், ராஜம்பேட் தொகுதியில் சந்திரசேகர், கடப்பா தொகுதியில் ரமாஜி இமானுவேல் ஆகியோர் போட்டியிடுகின்றனர்.


அதேப்போல் கேரளாவின் 3 தொகுதியில் போட்டியிடும் விடுதலை சிறுத்தைகள் கட்சி இடுக்கியில் செல்வராஜ், கோட்டையத்தில் ஜீவன் மற்றும் கொல்லத்தில் கே.ஆர் மீனா ஆகியோரை களமிறக்குகிறது.