மக்களவை தேர்தல் தோல்வியை திருஷ்டி பொட்டாக பார்ப்பதாகவும், 2021 ஆம் ஆண்டு சட்டமன்றத் தேர்தலில் வெற்றி பெற்றும் என துணை முதல்வர் பன்னீர் செல்வம் தெரிவித்துள்ளார்!


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

நடந்து முடிந்த 17 ஆவது மக்களவை தேர்தலில் கூட்டணி கட்சியுடன் சேர்ந்து இரட்டை இலை சின்னத்தில் போட்டியிட்ட 21 தொகுதிகளில் அதிமுக வெறும் 18.48% வாக்குகளை மட்டுமே பெற்றுள்ளது. கடந்த 47 ஆண்டுகளில் இல்லாத மோசமான தோல்வியை அக்கட்சி அடைந்துள்ளது. 


இந்நிலையில், மக்களவை தேர்தல் தோல்வியை திருஷ்டி பொட்டாக பார்ப்பதாகவும், 2021 ஆம் ஆண்டு சட்டமன்றத் தேர்தலில் வெற்றி பெற்று, தொடர்ந்து மூன்றாவது முறையாக அதிமுக ஆட்சியை பிடிக்கும் என்றும் துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார். சட்டப்பேரவையில் நிதித்துறை மற்றும் வீட்டுவசதித்துறை மானியக் கோரிக்கைகள் மீதான விவாதத்திற்கு அவர் பதில் அளித்துப் பேசினார்.


ஆளுங்கட்சியே மீண்டும் ஆட்சியமைத்த சாதனையை அதிமுக செய்ததாகவும், உள்ளாட்சி தேர்தல், கூட்டுறவுத்தேர்தல் உள்ளிட்ட அனைத்து தேர்தல்களிலும் 90 சதவிகிதத்திற்கும் அதிகமான இடங்களில் வெற்றி பெற்றதாகவும் ஓ.பன்னீர்செல்வம் குறிப்பிட்டார்.


அவ்வாறு பல்வேறு வெற்றிகளை குவித்த அதிமுகவிற்கு திருஷ்டி கழிக்கும் வகையில் நாடாளுமன்ற தேர்தல் முடிவை மக்கள் வழங்கியிருப்பதாகவும், இருப்பினும் தேனி தொகுதியை மட்டும் தாங்கள் விட்டுவிட வில்லை எனவும் அவர் தெரிவித்தார்.


2021ஆம் ஆண்டு நடைபெற உள்ள சட்டப்பேரவை தேர்தலிலும் வெற்றிபெற்று ஆளுங்கட்சியே மூன்றாவது முறையாக ஆட்சியமைக்கும் ஹாட்ரிக் சாதனையை நடத்திக் காட்டுவோம் எனவும் ஓ.பன்னீர்செல்வம் கூறியுள்ளார்.