மருத்துவ படிப்பில் 85 சதவீத இட ஒதுக்கீடு அரசாணை ரத்தை எதிர்த்து மேல்முறையீடு செய்வோம் என அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார்.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

தமிழக அரசு கடந்த மாதம் 22-ம் தேதி மருத்துவ படிப்புக்கான எம்.பி.பி.எஸ்., பி.டி.எஸ். படிப்புகளில் மாநில பாடத்திட்டத்தில் படித்த மாணவர்களுக்கும் 85 சதவீதம் இட ஒதுக்கீடு வழங்கப்படும் என தமிழக அரசு ஒரு அரசாணை பிறப்பித்தது. 


மாநில பாடத் திட்டத்தில் படித்த மாணவர்களக்கு 85 சதவீதம் இட ஒதுக்கீடு வழங்கினால், சிபிஎஸ்இ பாட திட்டத்தில் படித்த மாணவர்கள் பாதிக்கப்படுவார்கள். எனவே இந்த அரசாணையை ரத்து செய்ய வேண்டும் என அரசாணைக்கு எதிராக சிபிஎஸ்இ மாணவர்கள் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர். 


இன்று விசாரணைக்கு வந்த இந்த வழக்கின் மனுவை விசாரித்த சென்னை உயர் நீதிமன்றம், மருத்துவ படிப்பில் 85 சதவீத இட ஒதுக்கீடு வழங்கும் தமிழக அரசாணையை ரத்து செய்து உத்தரவிட்டது.


இந்நிலையில், தமிழக அமைச்சர் விஜயபாஸ்கர், மாநில பாடத்திட்டத்தில் படித்த மாணவர்களுக்கு மருத்துவ மாணவ சேர்க்கையில் 85% இட ஒதுக்கீடு வழங்க வகை செய்யும் அரசாணையை உயர் நீதிமன்றம் ரத்து செய்ததை எதிர்த்து மேல்முறையீடு செய்யப்படும் என்றும், அதற்கான ஆலோசனையில் தற்போது ஈடுபட்டுள்ளதாக அமைச்சர் கூறினார்.