புது டெல்லி: 542 தொகுதிகளுக்கு நடந்து முடிந்த 17-ஆம் மக்களவை தேர்தலில் பாஜக தனி பெரும்பான்மையுடன் வெற்றி பெற்று ஆட்சியை பிடித்துள்ளது. பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி 353 இடங்களில் வெற்றி பெற்று மீண்டும் ஆட்சியை பிடித்தது.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

அதேவேலையில் தமிழகம் மற்றும் புதுசேரி மாநிலத்தில் 39 தொகுதிக்கு நடைபெற்ற லோக் சபா தேர்தலில் 38 இடங்களை திமுக கூட்டணி வென்றுள்ளது. பாஜக-அதிமுக கூட்டணி வெறும் ஒரே இடத்தில் மட்டும் வெற்றி பெற்றது. அதிலும் பாஜக தான் போட்டியிட்ட ஐந்து இடங்களிலும் தோல்வியை சந்தித்தது. அதிமுக சார்பில் ஓ.பன்னீர்செல்வத்தின் மகன் ஓ.பி. ரவீந்திரநாத் குமார் தேனி பாராளுமன்ற தொகுதியில் வெற்றி பெற்றார்.


தற்போது பாஜக - அதிமுக கூட்டணி வெற்றி பெற்ற ஒரே வேட்பாளர் ஓ.பி. ரவீந்திரநாத் குமார் என்பதால், அவரை எப்படியாவது அமைச்சராக்கி விட வேண்டும் என தமிழக துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் பல முயற்ச்சிகளை எடுத்து வந்தார். ஆனால் அவரின் அனைத்து முயற்ச்சிகளும் வீண்ணாகி விட்டது. நேற்று மோடி அமைச்சரவையில் பதவியேற்றுக் கொண்ட அமைச்சர்கள் பட்டியலில் ஓ.பி. ரவீந்திரநாத் குமார் பெயர் இடம் பெறவில்லை. 


அதே நேரத்தில் வரும் ஜூலை மாதம் தமிழகத்தில் 6 மாநிலங்களவை இடங்கள் காலியாக உள்ளது. அதில் திமுக, அதிமுகவுக்கு தலா 3 இடங்கள் கிடைக்கும். அந்த பதவியில் யாரை அமர்த்துவது என்று திமுக மற்றும் அதிமுக கட்சிகளில் சலசலப்பு ஏற்பட்டு வருகிறது. 


திமுக-வை பொருத்த வரை ஒரு இடம் கூட்டணி விதிப்படி மதிமுக பொதுச்செயலாளர் வைகோவுக்கு என்று முடிவு செய்யப்பட்டு உள்ளது. அடுத்த இரண்டு யாருக்கு கொடுப்பது என்பதில் இழுபறி நடந்து வருகிறது. 


அதேபோல அதிமுக - பாமக தேர்தல் கூட்டணி உடன்பாடு செய்த போது ஒரு மாநிலங்களவை பாமகவுக்கு வழங்கப்படும் என உடன்பாடு செய்யப்பட்டு உள்ளது. மீதமுள்ள இரண்டு இடத்தில் ஒரு இடத்தை பாஜகவுக்கு தரும்படி பாஜக மேலிடம் அதிமுகவிடம் கூறியுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.


பாமகவுக்கு ஒரு இடம், பாஜகவும் ஒரு இடம் என இரண்டு இடங்களை விட்டுக்கொடுத்து விட்டால், கட்சியின் முக்கிய தலைவர்களுக்கு எப்படி பதவி வழங்குவதும் என்றும், மாநிலங்களவையில் அதிமுகவின் பலம் குறையுமே என்ற அச்சத்திலும் அதிமுக உள்ளது.


இதுக்குறித்து முடிவு எடுப்பதில் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி மிகவும் குழப்பத்தில் இருப்பதாகவும் தகவல்கள் கிடைத்துள்ளது. அநேகமாக இன்னும் இரண்டு நாளில் இதுக்குறித்து முக்கிய முடிவு எடுக்கப்படும் எனத் தெரிகிறது.