உங்கள் தாய், தந்தை மற்றும் குடும்பத்தை நன்றாகப் பார்த்துக்கொள்ளுங்கள்; அதன் பிறகுதான் மற்றவை எல்லாம் நடிகர் ரஜினி....


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

இயக்குநர் கார்த்திக் சுப்பராஜ் இயக்கத்தல் நடிகர் ரஜினிகாந்த நடித்துவரும் திரைப்படம் "பேட்ட". இப்படத்தில் ரஜினிக்கு ஜோடியாக த்ரிஷா நடிக்கிறார். விஜய் சேதுபதி, சிம்ரன், நவாசுதீன் சித்திக், பாபி சிம்ஹா, சனந்த் ரெட்டி, மேகா ஆகாஷ், குரு சோமசுந்தரம் ஆகியோர் முக்கியக் கதாப்பாத்திரங்களில் நடிக்கிறார்கள். முதன்முறையாக மாமா ரஜினியின் படத்துக்கு இசையமைக்கிறார் அனிருத்.


இப்படத்தின் படப்பிடிப்பு வேலைகள் முடிவடைந்த நிலையில் கடந்த 20 ஆம் தேதி நடிகர் ரஜினிகாந்த சென்னை திரும்பினார். அப்போது செய்தியாளர்களை சந்தித்த அவர், கட்சி தொடங்குவதற்கான 90 சதவீத வேலைகள் நடந்து முடிந்துவிட்டதாகவும், நாடாளுமன்றத் தேர்தல் அறிவித்த பின், நிலைப்பாடு குறித்து தெரிவிக்கப்படும் என தெரிவித்த்ருந்தார். 


இந்நிலையில், நேற்று ராகவேந்திரா மண்டபத்தில் தன் கட்சி நிர்வாகிகளுடன் இரண்டு மணி நேரம் ஆலோசனையில் ஈடுபட்டிருந்தார் ரஜினி. இதைத் தொடர்ந்து தன் மன்ற நிர்வாகிகளுக்கு சில அறிவுரை வழங்கி அறிக்கை ஒன்றை இன்று வெளியிட்டுள்ளார். அதில், நமது மக்கள் மன்றத்தில் எடுக்கப்பட்ட ஒழுங்கு நடவடிக்கைகள் என் அனுமதி இல்லாமல் நடந்ததாக சிலர் பொய்ப் பிரச்சாரம் செய்து வருவது என் கவனத்திற்கு வந்தது. அதைத் தெளிவுபடுத்த விரும்புகிறேன்.


நம் மன்ற உறுப்பினர்கள் நியமனம், மாற்றம் மற்றும் ஒழுங்கு நடவடிக்கைகள் அனைத்துமே என் பார்வைக்கு கொண்டு வரப்பட்டு என் ஒப்புதலுடன் தான் அறிவிக்கப்படுகின்றன. 


கடந்த வருடன் மே மாதம் நடந்த ரசிகர்கள் சந்திப்பின் போதே, `நான் அரசியலுக்கு வந்தால் அதை வைத்துப் பதவி வாங்ணும், பணம் சம்பாதிக்கணும் என்ற எண்ணத்தோடு இருப்பவர்களை அருகிலேயே சேர்க்கமாட்டேன். அப்படிப் பட்டவர்கள் இப்போதே விலகி விடுங்கள்' என்று நான் கூறியிருந்தேன் என்று தெளிவாகக் கூறியிருந்தேன். 


நான் சொன்னது வெறும் பேச்சுக்காக இல்லை. தமிழ்நாட்டில் ஒரு புது அரசியலை அறிமுகப்படுத்தி அதன் மூலம் ஒரு நல்ல அரசியல் மாற்றத்தை உருவாக்க வேண்டும் என்பதற்காகதான் நாம் அரசியலுக்கு வந்துள்ளோம். அப்படியல்லாமல் மற்றவர்களைப் போல் அரசியல் செய்ய நாம் ஏன் அரசியலுக்கு வரவேண்டும்.? நாம் எந்த எண்ணத்துடன் அரசியலுக்கு வந்துள்ளோம் என்பதை முதலில் அனைவரும் அறிந்திருக்க வேண்டும் என்பது மிக மிக முக்கியம். 


ஒருவரது எண்ணங்கள் சரியானதாக இருந்தால் தான் அவரது செயல்பாடுகள் சரியாக இருக்கும். எனவே தவறான எண்ணம் உள்ளவர்களிடம் இருந்து நம்மை நாம் பாதுகத்துகொள்ளவேண்டிய கட்டாயத்தில் உள்ளோம். 


நான் அடிக்கடி சொல்லும் ஒரு விஷயத்தை மீண்டும் நினைவுபடுத்த விரும்புகிறேன். முதலில் நீங்கள் உங்கள் தாய், தந்தை மற்றும் குடும்பத்தை நன்றாகப் பார்த்துக் கொள்ளுங்கள். அதன் பிறகுதான் மற்றவை எல்லாம். தன் குடும்பத்தை பராமரிக்காமல் மன்றப் பணிகளுக்காக யாரும் வரவேண்டாம். மன்றத்திற்காக யாரையும் செலவு செய்ய வேண்டும் என்று நான் சொன்னது கிடையாது. நான் மன்றத்தினருக்குக் கொடுத்த வேலை, பணம், செலவு செய்து முடிக்க வேண்டிய வேலையும் கிடையாது. அதனால் யாராவது என்னிடம் வந்து நான் மன்றத்திற்காக பணம் செலவு செய்தேன் என்று சொன்னால் என்னால் ஏற்றுக் கொள்ள முடியாது. 


வெறும் ரசிகர் மன்றத்தை மட்டும் வைத்துக் கொண்டு அரசியலில் நாம் நினைத்ததை சாதிக்க முடியும் என்று யாராவது நினைத்தால் அவரது புத்தி பேதலித்துள்ளது என்று  தான் அர்த்தம். மக்களுடைய ஆதரவு இல்லாமல் அரசியலில் நாம் நினைத்ததை சாதிக்க முடியாது. 30, 40 வருடங்களாக ரசிகர் மன்றத்தில் இருந்ததால் அது மக்கள் மன்றத்தில் பதவி பெறுவதற்கு அரசியலில் ஈடுபடுவதற்கான முழுத் தகுதி ஆகிவிட முடியாது. 


நம்முடன் சேர்ந்து செயல்படவிரும்பும் மக்களுக்கு பொறுப்புகளை வழங்கி நாம் அவர்களுடன் இணைந்து செயல்பட வேண்டும். கொடுத்த வேலையைத் தானும் செய்யாமல், துடிப்புடன் செயல்படுபவர்களையும் செய்ய விடாமல் தடுத்து மன்றத்தின் கொள்கைக்கு முரணாக செயல்பட்டவர்களைத்தான் நீக்கி இருக்கிறோம். நம் கொள்கைக்கு ஒத்துவராதவர்களை நம்முடன் வைத்திருப்பதில் அர்த்தம் இல்லை. ஊடகங்கள் மூலமாக நம்மைப் பற்றி அவதூறு பரப்பி வருபவர்கள் என் ரசிகராக இருக்க முடியாது. வீண் வதந்திகள் நம் நேரத்தை வீணாக்கக்கூடாது. மன்றத்துக்காக உண்மையாக உழைக்கும் அனைவரது செயல்பாடுகளையும் நான் நன்கு அறிவேன். அந்த உழைப்பு வீண் போகாது. அதற்கான பலனை இறைவன் நம் நாட்டு மக்களுக்குத் தருவான் என நான் முழுமையாக நம்புகிறேன்” என குறிப்பிட்டுள்ளார்.