சந்திரயான் 2 செயற்கைக்கோளின் புவி சுற்றுவட்டப்பாதை இரண்டாவது முறையாக இன்று உயர்த்தப்பட்டது!!


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

நிலாவின் தென்பகுதியை ஆராய்ச்சி செய்ய சந்திரயான்-1 திட்டத்தின் வெற்றியை தொடர்ந்து, நிலவின் தென்துருவ பகுதியை ஆய்வு செய்யும் சந்திரயான் 2 திட்டத்துக்கான பணிகள் தொடங்கின. கடந்த 15ம் தேதி விண்ணில் ஏவப்பட இருந்த சந்திரயான்-2 விண்கலம் தொழில்நுட்ப கோளாறு காரணமாக நிறுத்தப்பட்டது. பின்னர், தொழில்நுட்பக் கோளாறு சரி செய்யப்பட்டு, கடந்த 22 ஆம் தேதி சந்திரயான்-2 விண்கலன் விண்ணில் பாய்ந்தது. 


புவி வட்டப் பாதையில் இயங்கி வரும் விண்கலத்தின் உயரம் கடந்த இரு நாட்களுக்கு முன் உயர்த்தப்பட்டது. இந்நிலையில் நேற்று இரவு ஒரு மணியளவில் 2 வது முறையாக சுற்று வட்டப்பாதையின் உயரம் மேலும் அதிகரிக்கப்பட்டது. சுமார் 883 விநாடிகள் மேற்கொள்ளப்பட்ட இந்தப் பணிகளைத் தொடர்ந்து விண்கலம் 54 ஆயிரத்து 829 கிலோ மீட்டர் உயரத்தைத் தொட்டுள்ளது.


இந்தப் பணிகள் வெற்றிகரமாக நடந்ததாக இந்திய விண்வெளி ஆய்வு மையமான இஸ்ரோ தெரிவித்துள்ளது. இதனைத் தொடர்ந்து, 3வது முறையாக வரும் 29 ஆம் தேதி சந்திரயான் 2 விண்கலத்தின் சுற்றுவட்டப்பாதை அதிகரிக்கப்பட உள்ளது. ஆகஸ்ட் 14 ஆம் தேதி முதல் புவிட்டப் பாதையில் இருந்து விலகி, ஆகஸ்ட் 20 ஆம் தேதி நிலாவின் சுற்றுவட்டப்பாதையில் விண்கலம் பயணிக்க தொடங்கும்.