இருசக்கர வாகனங்களை வணிக ரீதியில் பயன்படுத்த தமிழக அரசு விதிமுறைகள் வகுக்கும் வரை, Rapido செயலியினை தொடர்ந்து செயல்பட சென்னை உயர்நீதிமன்றம் அனுமதித்துள்ளது.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

இருசக்கர வாகனங்கள் வைத்திருப்பவர்கள் குறிப்பிட்ட இரு இடங்களுக்கு இடையில் பயணிக்கும் போது, பின் இருக்கைக்கு பயணியை வாடகைக்கு அழைத்துச் செல்லும் வகையில், Rapido எனும் செயலியையும், இணைய தளத்தையும் தெலங்கானாவைச் சேர்ந்த தனியார் நிறுவனம் துவங்கி நடத்தி வருகிறது.


இந்நிலையில் Rapido செயலிக்கும், இணையதளத்திற்கும் தடை விதிக்கக் கோரி கால் டாக்சி ஓட்டுனர் சங்கம் சென்னை உயர் நீதிமன்றத்தின் மனு தாக்கல் செய்தார். இந்த மனுவை விசாரித்த சென்னை உயர்நீதிமன்ற தனி நீதிபதி, Rapido செயலிக்கும், இணைய தளத்திற்கும் தடை விதித்து ஜூலை 18-ஆம் தேதி உத்தரவு பிரப்பித்தார்.


இந்த உத்தரவை எதிர்த்து Rapido நிறுவனம் சார்பில் மேல் முறையீட்டு மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்த மேல்முறையீட்டு மனு நீதிபதிகள் வினீத் கோத்தாரி மற்றும் கார்த்திகேயன் அடங்கிய அமர்வின் முன் விசாரணைக்க வந்தது. 


Rapido நிறுவனம் தரப்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர், இருசக்கர வாகனத்தை வணிக ரீதியாக பயன்படுத்துவதை தடை செய்யும் வகையில் எந்த விதிமுறையும் இல்லை என வாதிட்டார். மேலும் இருசக்கர வாகனத்தில் பின் இருக்கையில் பயணிப்பவருக்கும் காப்பீடு செய்யப்படுவதாகவும், அவருக்கு தேவையான அனைத்து பாதுகாப்பு ஏற்பாடுகளும் செய்யப்படுவதாகவும் தெரிவித்தார். 


இந்த வாதத்தை ஏற்றுக் கொண்ட நீதிபதிகள், இந்த வழக்கு தொடர்பாக தமிழக அரசுத்தரப்பில் எந்த பதில்மனுவும் தாக்கல் செய்யவில்லை எனக் கூறி, இரண்டு வாரங்களுக்குள் பதில் மனு தாக்கல் செய்ய உத்தரவிட்டனர்.  மேலும், Rapido செயலிக்கும், இணைய தளத்திற்கும் தடை விதித்து தனி நீதிபதி பிறப்பித்த உத்தரவுக்கும் தடை விதித்து உத்தரவிட்டனர்.


அதேவேளையில் செயலியை நீக்கும்படி கூகுள், ஆப்பிள் ஆகிய நிறுவனங்களுக்கு சைபர் குற்றப் பிரிவு உதவி ஆணையர் அனுப்பிய கடிதத்திற்கும் தடை விதித்து நீதிபதிகள் உத்தரவு பிரப்பித்தனர்.