சென்னை டி.ஜி.பி அலுவலகம் முன்பு நேற்று தீக்குளித்து தற்கொலைக்கு முயன்ற காவலர்கள் என்ன காரணத்திற்காக இந்த முயற்சியில் ஈடுபட்டார்கள் என தேனி மாவட்ட எஸ்.பி பாஸ்கரன் தெரிவித்துள்ளார்.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

தேனி மாவட்டத்தைச் சேர்ந்த ரகு மற்றும் கணேஷ் என்ற இரு காவலர்கள் இன்று சென்னை டி.ஜி.பி அலுவலகம் முன்பாக தங்கள் உடலில் மண்ணெண்ணெய் ஊற்றி தீக்குளிக்க முயன்றனர். இதைப்பார்த்து அருகில் இருந்த காவலர்கள் அவர்களை தடுத்து காப்பாற்றினர். 


இந்த சம்பவத்தை விசாரணை செய்ததில், இருவரும் ஆயுதப்படையைச் சேர்ந்தவர்கள் என்றும் சாதி ரீதியான அடிப்படையில் அவர்கள் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளதாக குற்றம் சாட்டியுள்ளனர்.


இந்த சம்பவம் குறித்து எஸ்.பி பாஸ்கரன் செய்தியாளர்களிடம் பேசினார்...!


“காவலர் கணேஷ் சிறைக்கைதியை ஆஜர்ப்படுத்தும் போது கைதியிடம் கஞ்சா இருந்தது கண்டறியப்பட்டது. அப்போது, சிறைக்காவலர் அளித்த புகாரின் பேரில் கணேஷ் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டது. அதேபோல், கம்பத்தில் நடைபெற்ற ரேக்ளா பந்தயத்தில் சீருடையுடன் கலந்து கொண்டு மக்கள் முகம் சுழிக்கும் வகையில் நடந்து கொண்டார். 


எனவே, அவர் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. ஒவ்வொரு முறை பணி நியமனம் செய்யும் போதும், உயர் அதிகாரிகள் சிரமப்படும் வகையில் சென்றுவிடுவார். உயர் அதிகாரிகளுடன் வாக்குவாதம் செய்வதை வாடிக்கையாக கொண்டுள்ளார்.


அதேபோல், காவலர் ரகு அவசர காலங்களில் பணிக்கு அழைக்கும் போது போனை சுவிட்ச் ஆப் செய்துவிடுவார். காவலர் குடியிருப்பிலும் இருக்கமாட்டார். இந்த இரண்டு காவலர்கள் மீது வந்த புகார்களின் அடிப்படையில் அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. 


தவறுகளை திருத்திக் கொள்ளும் பொருட்டு இவர்கள் இருவருடன் சேர்த்தும் மொத்தம் 4 பேர் ராமநாதபுரம் மாவட்டத்திற்கு இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர். இடமாற்றத்தை ஏற்க மறுத்து காவலர்கள் கணேஷ், ரகு இதுபோன்ற செயல்களில் ஈடுபட்டு வருகின்றனர்” என கூறினார்.