இலங்கை முன்னாள் அதிபர் ராஜபக்சே ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியில் இருந்து விலகி பொதுஜன முன்னணி கட்சியில் இணைந்துள்ளார்!


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் முன்னாள் தலைவராக இருந்தவர் மகிந்த ராஜபக்சே. ஆனால் தற்போது அக்கட்சியின் ஆலோசகராக மட்டுமே செயல்பட்டு வருகின்றார். கடந்த 2015-ஆம் ஆண்டு நடைப்பெற்ற தேர்தலுக்கு பின்னர் அதிபர் பதவி தொடர்பாக இருவருக்கும் இடையில் சிறு மோதல் ஏற்பட்டது. ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியில் மைத்திரிபால சிறிசேனவும் மகிந்த ராஜபக்‌சேவும் ஒரு பிரிவுகளாக செயல்பட்டு வந்தனர். 


இதனையடுத்து சிறிசேனா, ரணில் விக்ரமசிங்கேவுடன் இணைந்து இலங்கையில் ஆட்சி அமைத்தனர். அதிபர் பதவியினை சிறிசேன பெற, ரணில் பிரதமராக பதவியேற்றுக்கொண்டார்.


இந்நிலையில் கடந்த அக்டோபர் 26-ஆம் நாள், இலங்கை பிரதமர் ரணில் விக்ரமசிங்கவை பதவி நீக்கம் செய்து அதிபர் சிறிசேன அதிரடி அறிவிப்பை வெளியிட்டார். மேலும், முன்னாள் அதிபர் ராஜபக்சவை புதிய பிரதமராக அறிவித்து, பதவியேற்கச் செய்தார். (இவரை தொடர்ந்து இதுவரை 30 அமைச்சர்கள் ராஜபக்சே அரசவையில் பதவியேற்றுள்ளனர்)


அதிபர் சிறிசேனவின் அறிவிப்பை ஏற்காத ரணில், பிரதமராக தான் நீடிப்பதாக அதிபருக்கு கடிதம் எழுதினார். ராஜபக்சேவை பிரதமர் பதவியில் நியமிக்க அதிபர் சிறிசேனாவுக்கு அதிகாரம் இல்லை என்றும் அவர் தெரிவித்தார். இதனைத்தொடர்ந்து தமக்கு பெரும்பான்மை இருப்பதாகவும், நாடாளுமன்றத்தைக் கூட்ட வேண்டும் என்றும் ரணில் கோரிக்கை விடுத்தார். 



இதனையடுத்து இலங்கை அரசின் பெரும்பான்மையினை நிரூபிக்க நவம்பர் 14- ஆம் நாள் குறிக்கப்பட்டது. ஆனால் திடீர் திருப்பமாக கடந்த நவம்பர் 9-ஆம் நாள் இலங்கை நாடாளுமன்றம் கலைக்கப்படுவதாக அதிபர் சிறிசேனா அறிவித்தார்.


இந்நிலையில், தற்போது ராஜபக்சே ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியில் இருந்து விலகி பொதுஜன முன்னணி கட்சியில் இணைந்துள்ளார். அவருடன் சுதந்திரக் கட்சியை சேர்ந்த சுமார் 50 முன்னாள் எம்.பி.க்களும் பொதுஜன முன்னணியில் இணைந்ததாக இலங்கை ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.