சார் என் மகளை காணவில்லை.. காவல்துறையின் பதில் "யார் உடனாவது ஓடிருக்கும்"

ஹைதராபாத்தில் நடந்த கொடூர சம்பவத்தில் காவல்துறையின் வெட்கக்கேடான செயல் வெளிவந்து உள்ளது.

Written by - Shiva Murugesan | Last Updated : Dec 2, 2019, 07:40 PM IST
சார் என் மகளை காணவில்லை.. காவல்துறையின் பதில் "யார் உடனாவது ஓடிருக்கும்" title=

புதுடெல்லி: ஹைதராபாத்தில் கால்நடை மருத்துவதற்கு நேர்ந்த கொடுமையை கண்டித்து பாராளுமன்றத்தில் இருந்து சாலைகளிலும் பாலியல் பலாத்காரம் மற்றும் இரக்கமற்ற கொலை சம்பவம் கண்டித்து போராட்டம் நடைபெற்று வருகிறது. தெலுங்கானாவில் அரசு கால்நடை மருத்துவராக பணியாற்றி வந்த திஷா (பெயர் மாற்றப்பட்டு உள்ளது), கடந்த வியாழக்கிழமை அன்று இரவு பணி முடிந்து வீட்டிற்கு திரும்பிக் கொண்டிருந்தபோது, அவரது இருசக்கர வாகனம் பழுதாகி பாதியில் நின்றது. அந்நேரத்தில், அவருக்கு உதவுவது போல அங்கு வந்த இளைஞர்கள் நால்வரும், அவரை பாலியல் கூட்டுவன்கொடுமைக்கு உட்படுத்தியதோடில்லாமல், கொடூரமான முறையில் கொலையும் செய்தனர். இந்த சம்பவம் நாடு முழுவதும் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தி உள்ளது. இந்த இரக்கமற்ற சம்பவத்தில் ஈடுபட்ட குற்றவாளிகளுக்கு கடும் தண்டனை வழங்க வேண்டும் என அனைத்து தரப்பிலும் இருந்து கோரிக்கை வைக்கப்பட்டு வருகிறது.

இந்தநிலையில், பாதிக்கப்பட்டவரின் குடும்பத்தினர் ஒரு குற்றச்சாட்டை முன்வைத்துள்ளனர். இதன் மூலம் காவல்துறையின் வெட்கக்கேடான செயல் வெளிவந்து உள்ளது. நமக்கு கிடைத்த ஊடக அறிக்கையின்படி, பாதிக்கப்பட்டவரின் தந்தை தனது மற்றொரு மகளோடு போலீஸ் நிலையத்திற்கு சென்று, என் பெண்ணை காணவில்லை, ஏதாவது ​​அசம்பாவிதங்கள் ஏற்பட வாய்ப்புள்ளது என்று புகார் கூறியுள்ளார். ஆனால் அதற்கு போலீசார், "​​உங்கள் மகள் யாரோ ஒருவருடன் ஓடிப்போயிருக்க வேண்டும்" என்று பதில் அளித்து உள்ளார்.

மேலும் பாதிக்கப்பட்டவரின் தந்தை தங்கள் மகளை கண்டுபிடிக்க குறைந்தபட்சம் டோல் பிளாசா வரையாவது வாருங்கள் என போலீசாரை அழைத்துள்ளார். ஆனால் அவர்கள் (போலீசார்) அதை காதில் வாங்கிக் கொள்ளவில்லைக். மேலும் இந்த புகார், இந்த காவல் நிலையத்தில் பதிவு செய்ய முடியாது, மற்றொரு காவல் நிலையத்திற்கு செல்லுமாறு போலீசாரிடம் கூறியதாக குடும்பத்தினர் குற்றம் சாட்டினர்.

காலை 11 மணி முதல் அதிகாலை 3 மணி வரை காவல்துறை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என்று குடும்பத்தினர் தெரிவித்துள்ளனர். அதாவது, காவல்துறையினர் சரியான நேரத்தில் செயல்பட்டிருந்தால், டெல்லியில் நிர்பயாவுக்கு நடந்தது போல ஹைதராபாத்தில் நடந்திருக்காது மற்றும் அந்த பெண்ணை காப்பாற்றி இருக்கலாம்.

ஹைதராபாத்தின் நிர்பயா வழக்கு மக்களவை மற்றும் மாநிலங்களவையிலும் எதிரொலித்தது. மாநிலங்களவையில் சமாஜ்வாடி கட்சி பாராளுமன்ற உறுப்பினர் ஜெயா பச்சனும் தெலுங்கானாவில் நடந்த இந்த சம்பவம் குறித்து கோபத்தை வெளிப்படுத்தினார். இது வெட்கக்கேடான விஷயம் மட்டுமல்ல, இது மிகவும் பயமுறுத்தக்கூடிய செயல் என்று அவர் கூறினார். பெண்களுக்கு எதிரான இத்தகைய குற்றங்களை என்றென்றும் முடிவுக்குக் கொண்டுவருவதற்கான ஒரே தீர்வாக லிஞ்சிங் (Mob Lynching) இருக்கும் என்று ஜெயா கூறினார். அதாவது இதுபோன்ற குற்றங்களில் ஈடுபடுபவர்களை மக்களிடம் ஒப்படைத்து விடுங்கள். அவர்களே தண்டனை வழங்கி விடுவார்கள் எனக் கூறினார்.

அதேபோல் மக்களவை மற்றும் மாநிலங்களவையிலும் மற்ற மூத்த தலைவர்களும் குற்றவாளிகளுக்கு கடுமையான தண்டனை வழங்க வேண்டும் என்று குரல் கொடுத்தனர். இதுபோன்ற கொடூரமான குற்றங்களைச் சமாளிக்க கடந்த காலங்களில் பல சட்டங்கள் இயற்றப்பட்டிருந்தாலும், இதுபோன்ற கொடுமைச் செயல்களுக்கு எதிராக சமூக மக்கள் எழுந்திருக்க வேண்டிய நேரம் இது என்று மாநிலங்களவை எதிர்க்கட்சித் தலைவர் குலாம் நபி ஆசாத் தெரிவித்தார்.

திரிணாமுல் உறுப்பினர் சாந்தனு சென், விரைவான நீதிமன்றங்களை நிறுவுவதற்கும் கடுமையான தண்டனை வழங்குவதற்கும் வலுவான நடவடிக்கைகள் எடுக்கப்பட வேண்டும் என்று கூறினார். மேலும் குற்றவாளிகளுக்கு கொடுக்கப்படும் தண்டனையை விளம்பரப்படுத்தப்பட வேண்டும். இதன்மூலம் இத்தகைய கொடூரமான குற்றங்களைச் செய்வதற்கு முன் இருமுறை சிந்திப்பார்கள் " என்றார். 

தலைவர் எம்.வெங்கையா நாயுடு, "ஹைதராபாத்தில் நடந்தது மனிதநேயத்தின் அனைத்து கொள்கைகளுக்கும் அவமரியாதை. இது மிகவும் கண்டிக்கத்தக்கது" என்றார். இந்த கொடூரமான சம்பவம் தேசத்தின் மனசாட்சியை உலுக்கியுள்ளது என்று மேல் சபை உறுப்பினர்கள் தெரிவித்தனர்.

இதுபோன்ற கொடூரமான குற்றங்களைச் செய்பவர்களை அவமதித்து அடித்து கொலை செய்ய வேண்டும் என்று ஜெயா பச்சன் கூறினார். இன்று நாடாளுமன்ற அவைகள் " இந்தியாவில் பெண்கள் மற்றும் பெண்களின் பாதுகாப்பு குறித்த விவாதங்கள் மற்றும் பரிந்துரைகளுடன்" தொடங்கியது குறிப்பிடத்தக்கது.

உங்களுக்கு சுவாரஸ்யமான சிறப்பு செய்தி, முக்கிய செய்திகள், அரசியல் குறித்து விவரங்களை தெரிந்துக்கொள்ள நமது ZEE HINDUSTAN TV ஐ பாருங்கள். தற்போது ஹிந்தி, தமிழ் மற்றும் தெலுங்கு மொழிகளில் ஒளிப்பரப்பாகிறது.

 

Trending News