வெயில் காலத்தில் பெட்ரோல் டேங்க் புல் செய்தால் வண்டி வெடித்துவிடுமா?

Fuel Tank Full In Summer: இந்த வெயில் காலத்தில், உங்கள் வாகனங்களில் பெட்ரோலை, டேங்க் முழுவதும் நிரப்பினால் வண்டி வெடித்துவிடும் என தகவல் பரவி வருகிறது.

Written by - Sudharsan G | Last Updated : Feb 26, 2023, 02:49 PM IST
  • இந்த தகவல் பாரத் பெட்ரோலியம் பங்க் ஒன்றில் உள்ள பேனரில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
  • இது உண்மை பொய்யா என்பதை தெரிந்துகொள்ளுங்கள்.
  • இந்த தகவல் இணையத்தில் அதிகம் பரவுகிறது.
வெயில் காலத்தில் பெட்ரோல் டேங்க் புல் செய்தால் வண்டி வெடித்துவிடுமா? title=

Fact Check, Fuel Tank Full In Summer: முன்பெல்லாம் ஒவ்வொரு சீசனுக்கும் ஒவ்வொரு பழங்கள் கிடைக்கும். வெயில் காலம் என்று வந்துவிட்டால், நம் கண்களில் தர்பூசணி பழங்கள் தட்டுப்படத் தொடங்கிவிடும். இப்போதெல்லாம், அவை வருடம் முழுவதும் கிடைக்கிறது என்பது வேறு கதை. 

வாட்ஸ்அப் வகையறா வைரல்கள்

அதேபோல், இணைய யுகத்திலும் ஒவ்வொரு சீசனுக்கும் ஒவ்வொரு விஷயம் டிரெண்ட் ஆகும். அதுவும், வெயில் காலம் என்று வந்துவிட்டால், நம் வாட்ஸ்அப் வகையறாக்களை கையில் பிடிக்க முடியாது அந்த அளவிற்கு, வாட்ஸ்அப் முழுவதும் 'பயன்தரக்கூடிய செய்தி'களை நிரப்பி, அதை வைரலாக்குவதை ஒரு வேலையாகவே வைத்திருப்பார்கள். 

அந்த வகையில், தற்போது இணையத்தில் அதிகமாக ஒரு புகைப்படம் பகிரப்பட்டு வருகிறது. ஒரு பெட்ரோல் பங்கில் வைக்கப்பட்டுள்ள பேனரின் புகைப்படம்தான் அது. வாடிக்கையாளர்களுக்கான அறிவுரைகளை கொண்ட அந்த பேனரை 'பாரத் பெட்ரோல் எச்சரிக்கிறது' என்ற தலைப்பில் வைக்கப்பட்டுள்ளது.

அந்த பேனரில்,"வரும் நாட்களில் வெப்பநிலை உயரும் என்பதால் அதிகபட்ச வரம்பிற்குள் உங்கள் வாகனத்தில் பெட்ரோலை நிரப்ப வேண்டாம். இது எரிபொருள் தொட்டியில் வெடிப்பை ஏற்படுத்தும். தயவு செய்து உங்கள் வாகனத்தில் பாதி எரிபொருளை நிரப்பி, காற்று வருவதற்கு இடமளிக்கவும். இந்த வாரம் அதிகபட்சமாக பெட்ரோல் நிரப்பியதால் 5 வெடி விபத்துகள் நடந்துள்ளன" என குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த பேனர் வைக்கப்பட்ட இடம் குறித்த சரியான தகவல்கள் கிடைக்கவில்லை. எனவே, இதனை உறுதிசெய்ய இயலவில்லை. 

மேலும் படிக்க |  Best 7 seater car: 5.25 லட்ச ரூபாயில் 7 சீட்டர் கார்! அதிரடியாய் விலையை நிர்ணயித்த மாருதி

5 வெடி விபத்துகள்?

மேலும், அந்த பேனரில்,"தயவு செய்து பெட்ரோல் டேங்கை ஒரு நாளைக்கு ஒருமுறை திறந்து உள்ளே உள்ள வாயுவை வெளியே வர விடுங்கள்" என ஹைலைட் செய்து குறிப்பிட்டுள்ளது. மேலும, முக்கிய குறிப்பாக, இந்த செய்தியை படிப்பவர்கள், தங்கள் குடும்ப உறுப்பினர்களுக்கும், தெரிந்தவர்களுக்கும் அனுப்பி, விபத்தை தவிர்க்குமாறும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. 

இந்த பேனர், கடந்த ஒரு வாரமாக வாட்ஸ்அப், பேஸ்புக் என இணையத்தில் வலம் வந்துகொண்டிருக்கிறது. இருப்பினும், இந்த புகைப்படம் எங்கு, எப்போது எடுக்கப்பட்டது என்பது தெரியவில்லை. மேலும், 5 வெடி விபத்துகள் ஏற்பட்டதாக கூறுவதற்கும் முறையான சான்றுகள் இல்லை.

மேலும், இதனை உறுதிசெய்ய இணையத்தில் தகவல்களை தேடியபோது, இதுபோன்றே கடந்த சில ஆண்டுகளாகவே வெயில் காலத்தில் இதே தகவல்கள் பல இடங்களில் பகிரப்பட்டுள்ளது. ஆனால், இவை எதற்கும் ஆதாரங்கள் இல்லை. பாரத் பெட்ரோலியம் சார்பில் சமீபத்தில் எந்த தகவல்களும் வெளிவந்ததாக தெரியவில்லை. ஆனால், பல பெட்ரோலிய நிறுவனங்கள் இந்த தகவலை போலி எனக் கூறி இதற்கும் மறுப்பும் தெரிவித்துள்ளனர். இதுபோன்ற தகவலுக்கு, இந்தியன் ஆயில் நிறுவனம் கடந்த 2019ஆம் ஆண்டில், தனது ட்விட்டர் மறுப்பு தெரிவித்து, அதற்கு விளக்கமும் அளித்துள்ளது.

இந்தியன் ஆயில் விளக்கம்

அதில்,"குளிர் காலத்திலோ அல்லது வெயில் காலத்திலோ வாகனங்களில் எரிபொருளை, டேங்க் முழுவதும் நிரப்புவதில் எந்தவித ஆபத்தும் இல்லை என வாகன உற்பத்தியாளர்களே குறிப்பிட்டுள்ளனர்" என குறிப்பிட்டுள்ளது. 

மேலும்,"ஆட்டோமொபைல் உற்பத்தியாளர்கள் தங்கள் வாகனங்களை செயல்திறன் தேவைகள், சுற்றுப்புற நிலைமைகள் ஆகியவற்றின் அனைத்து அம்சங்களையும் கருத்தில் கொண்டு பாதுகாப்பு காரணிகளுடன் வடிவமைக்கின்றனர். பெட்ரோல்/டீசல் வாகனங்களுக்கான எரிபொருள் டேங்கில் குறிப்பிடப்பட்டுள்ள அதிகபட்ச அளவும் அதில் விதிவிலக்கல்ல. எனவே, குளிர்காலம் அல்லது கோடைக்காலம் எதுவாக இருந்தாலும் உற்பத்தியாளரால் குறிப்பிடப்பட்ட முழு வரம்பிற்குள் வாகனங்களில் எரிபொருளை நிரப்புவது முற்றிலும் பாதுகாப்பானது" விளக்கம் அளிக்கப்பட்டது. 

இந்தியன் ஆயில் 2019ஆம் ஆண்டு கொடுத்த இந்த விளக்கிம் தற்போதும் பொருந்திப்போகிறது. எனவே, மக்கள் இந்த தகவலை பார்த்தவுடன் வீணாக கவலைக்கொள்ள வேண்டாம். அதுமட்டுமின்றி, தற்போதைய பெட்ரோல் விலையில் டேங்க் முழுவதும் போடுவதற்கு எங்களிடம் பணமும் இல்லை என நெட்டிசன்கள் இதனை கலாய்த்தும் வருவது குறிப்பிடத்தக்கது. 

மேலும் படிக்க |  எச்சரிக்கை! போனை முறையாக சார்ஜ் செய்யவில்லை என்றால் வெடிக்கும்!

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ 

Trending News