இரட்டை இலை சின்னத்தை நிச்சயம் மீட்டெடுப்போம்- டிடிவி தினகரன்!!

அதிமுக அம்மா பெயரை பயன்படுத்த அனுமதிக்க நீதிமன்றத்தை அணுக உள்ளோம் என கோத்தகிரியில் டிடிவி தினகரன் கூறினார்.  

Last Updated : Jan 17, 2018, 12:26 PM IST
இரட்டை இலை சின்னத்தை நிச்சயம் மீட்டெடுப்போம்- டிடிவி தினகரன்!! title=

தனிக் கட்சி தொடங்குவது தொடர்பாக எம்ஜிஆர் பிறந்த நாளில் இன்று (ஜன.17) முடிவு செய்யப்படும் என்று டி.டி.வி. தினகரன் எம்.எல்.ஏ. நேற்று தெரிவித்தார். அதற்காக, நீலகிரி மாவட்டம் கோத்தகிரிக்கு நேற்று வந்த டிடிவி தினகரனுக்கு ஆதரவாளர்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர்.

அதனை தொடர்ந்து, கோத்தகிரியில் இன்று டிடிவி தினகரன் தலைமையில் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.

இதில் கலந்து கொண்டு செய்தியாளர்களிடம் பேசிய அவர்,அதிமுக தற்போது துரோகிகளின் கைகளில் சிக்கிக் கொண்டிருப்பதாகவும், அதனை மீட்க தொடர்ந்து போராடுவோம் என்றும் கூறினார்.

மேலும் அவர், அதிமுகவின் குழப்பத்திற்கு, மத்திய அரசு தான் காரணம். ஆர்.கே.நகரில் 20 ரூபாய் நோட்டு கொடுத்து வெற்றிபெற வேண்டிய அவசியம் எனக்கு இல்லை.

ஜெயலலிதா அறிவித்த திட்டங்களை நிறைவேற்றுவேன் என உறுதி அளித்ததால் மக்கள் என்னை வெற்றி பெற செய்தன. சட்டமன்ற தேர்தலில் நாங்கள் வெற்றி பெற்றால், அதிமுகவில் உள்ளவர்கள் எங்களுடன் இணைவார்கள் .

புதிய கட்சி உட்பட பல விஷயங்கள் பரிசீலனையில் உள்ளது. தேர்தல் ஆணைய தீர்ப்பு படி அதிமுக பெயர் மற்றும் சின்னத்தை தற்காலிகமாகவே பயன்படுத்துகின்றனர்.

இரட்டை இலை சின்னத்தை நிச்சயம் மீட்டெடுப்போம். அதிமுக அம்மா பெயரை பயன்படுத்த அனுமதிக்க  நீதிமன்றத்தை அணுக உள்ளோம். ஒரு வேளை நான் வேறு கட்சியை ஆரம்பித்தால் அதன் நோக்கம் அதிமுகவை மீட்டெடுப்பதாகவே அமையும். இவ்வாறு அவர் கூறினார். 

Trending News