COVID-19க்கு சித்த மருத்துவ சிகிச்சை மட்டுமே கொடுக்கும் ஆராய்ச்சி விரைவில் தொடங்கும்

CCRS: COVID-19 நோயாளிகளுக்கு சித்த மருத்துவ சிகிச்சை மட்டுமே கொடுப்பது தொடர்பான ஆராய்ச்சியைத் தொடங்க உள்ளது

Written by - Malathi Tamilselvan | Last Updated : Jul 13, 2020, 10:12 PM IST
  • கொரோனாவை குணப்படுத்த 'தனி சிகிச்சையாக' சித்த மருத்துவத்தை பயன்படுத்துவது தொடர்பான ஆய்வை CCRS தொடங்குகிறது
  • தமிழ்நாட்டின் சில மருத்துமனைகளில் அலோபதி சிகிச்சைக்கு 'add-on' சிகிச்சையாக சித்த மருத்துவம் பயன்படுத்தப்படுகிறது
  • கபசுர குடிநீர், ஆடாதோடை மணப்பாகு, பிரமானந்த பைரவம் மாத்திரை போன்றவற்றைக் கொடுத்து ஆராய்ச்சி நடத்தப்படும்
COVID-19க்கு சித்த மருத்துவ சிகிச்சை மட்டுமே கொடுக்கும் ஆராய்ச்சி விரைவில் தொடங்கும் title=

சென்னை: COVID-19 நோயாளிகளை குணப்படுத்த 'தனி சிகிச்சையாக' (standalone) சித்த மருத்துவத்தை பயன்படுத்த முடியுமா என்ற ஆய்வை விரைவில் CCRS (Central Council for Research) தொடங்கவுள்ளது. சி.சி.ஆர்.எஸ் என்பது சித்த மருத்துவ முறையின் ஆராய்ச்சி தொடர்பான உயர்நிலை அமைப்பு.

தற்போது தமிழ்நாட்டில் ஸ்டான்லி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை மற்றும் சென்னை மற்றும் தமிழ்நாட்டின் பல்வேறு மாவட்டங்களில் உள்ள அரசு நடத்தும் பிற நிறுவனங்களில் அலோபதி சிகிச்சைக்கு 'add-on' என்ற கூடுதல் சிகிச்சையாக சித்த மருத்துவ முறை  சிகிச்சை வழங்கப்படுகிறது.

COVID-19 நோயாளிகளுக்கு சிகிச்சையளிக்க உகந்த மருந்து இல்லாத நிலையில், சித்த மருத்துவ சிகிச்சையில் கூடுதல் சிகிச்சையாக வழங்கியதில் மாநில அரசுக்கு ஒரு ஒளிக்கீற்று தென்பட்டு நம்பிக்கை எழுந்துள்ளது. 

அதைத் தொடர்ந்து, லேசான மற்றும் மிதமான அறிகுறி கொண்ட கொரோனா பாதித்த நோயாளிகளுக்கு சிகிச்சையளிப்பதற்காக வியாசர்பாடியில் உள்ள டாக்டர் அம்பேத்கர் அரசு கலைக் கல்லூரி மற்றும் சென்னையில் உள்ள ஜவஹர் கல்லூரியில் பிரத்யேக சித்த வைத்திய முறையில் கோவிட் பராமரிப்பு மையத்தை தமிழக அரசு நிறுவியது.

"கபசுர குடிநீர், ஆடாதோடை மணப்பாகு, பிரமானந்த பைரவம் மாத்திரை மற்றும் இன்னும் இரண்டு மருந்துகளின் கலவையை வழங்குவதன் மூலம் கொரோனா வைரஸ் நேர்மறை நோயாளிகளுக்கு பிரத்யேக சிகிச்சை அளித்து ஆராய்ச்சியை மேற்கொள்ளவிருக்கிறோம்" என்று சி.சி.ஆர்.எஸ் இயக்குநர் ஜெனரல் டாக்டர் கே. கனகவள்ளி பி.டி.ஐ செய்தி நிறுவனத்திடம் தெரிவித்தார்.

Read Also | தலைநகரை கலக்கும் கபசுர குடிநீர்: சித்த மருத்துவத்துக்கு அதிகரிக்கும் மவுசு

சித்த வைத்திய முறையில் மாத்திரை வடிவத்தில் உள்ள பிரமானந்த பைரவம் என்பது காய்ச்சலுக்கு சிகிச்சையளிக்கப் பயன்படுத்தப்படும் மூலிகை மருந்தாகும். இருமல், பல்வேறு வகையான காய்ச்சல் மற்றும் வயிற்று கோளாறுகளுக்கு சிகிச்சையளிக்க ஆடாதோடை மணப்பாகு  பயன்படுத்தப்படுகிறது.

"சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடமிருந்தும், ஆயுஷ் அமைச்சகத்திலிருந்தும் தேவையான அனுமதியை நாங்கள் ஏற்கனவே பெற்றுவிட்டோம்" என்று கனகவல்லி கூறினார். தேவையான நிதியை அரசு ஒதுக்கீடு செய்தவுடன் ஆராய்ச்சி தொடங்கும்.

கொரோனா வைரஸ் நோயாளிகள் சிகிச்சை பெற்று வரும் சித்த சி.சி.சி மற்றும் மாவட்ட மருத்துவமனைகளில் ஏற்கனவே சித்த வைத்திய முறையின் சில மருந்துகள் முயற்சிக்கப்படுகின்றன.

Read Also | வயிற்றுப்போக்கு மற்றும் வாந்தி ஏற்படுவதும் கொரோனாவின் அறிகுறியா?

ஸ்டான்லி அரசு மருத்துவமனையில்  சித்தா கூடுதல் சிகிச்சையாகப் பயன்படுத்தப்படுவது குறித்த விரிவான அறிக்கை இந்த மாத இறுதிக்குள் தாக்கல் செய்யப்படும்.

சமீபத்தில், சித்த மருத்துவர்கள் மற்றும் சிகிச்சையில் ஈடுபட்ட அதிகாரிகள் ஸ்டான்லி மருத்துவமனை அதிகாரிகளுடன் கலந்தாலோசனை செய்து நிலைமையை மதிப்பாய்வு செய்தனர்.   

"அறிக்கையை இறுதி செய்யவதற்காக சில அறிக்கைகளுக்காக காத்துக் கொண்டிருக்கிறோம். அதிலும் குறிப்பாக கொரோனா வைரஸ் நோயாளிகளுக்கு கொடுக்கப்படும் கபசுர கலவையின் மூலிகை கலவையால் அதிகரிக்கும் நோய் எதிர்ப்பு சக்தியான immunoglobulin ஆய்வு (study of immunity boosting herbal concoction) அறிக்கை அனைவருக்கும் எதிர்ப்பார்ப்பை அதிகரித்திருகிறது" என்று சி.சி.ஆர்.எஸ் இயக்குநர் ஜெனரல் டாக்டர் கே. கனகவள்ளி தெரிவித்தார்.

Trending News