மதச்சார்பற்ற ஜனதா தளம், பாஜகவுக்கு ஆதரவளிப்பதாக வெளியாகும் தகவல்கள் அடிப்படை ஆதாரமற்றது என கர்நாடக மாநில முன்னாள் முதல்வர் குமாரசாமி தெரிவித்துள்ளார்!


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

கர்நாடகா மாநிலத்தில் குமாரசாமி தலைமையில் காங்கிரஸ்-ஜனதா தளம் (எஸ்) கூட்டணி அரசு நடந்து வந்தது. கூட்டணி கட்சிகளை சேர்ந்த 15 எம்.எல்.ஏ.க்கள் ராஜினாமா செய்ததால் கூட்டணி அரசுக்கு ஆபத்து ஏற்பட்டது. நேற்று முன்தினம் சட்டசபையில் நடந்த நம்பிக்கை வாக்கெடுப்பில் குமாரசாமி அரசு தோல்வி அடைந்தது. அரசுக்கு ஆதரவாக 99 வாக்குகளும், எதிராக 105 வாக்குகளும் விழுந்தன.


இதையடுத்து குமாரசாமி முதல்-மந்திரி பதவியை ராஜினாமா செய்தார். இதனை தொடர்ந்து கர்நாடக மாநில பாஜக தலைவர் எடியூரப்பா நேற்று முன்தினம் மாநிலத்தின் முதல்வராக பதவியேற்றுக் கொண்டார். 


இந்நிலையில், குமாராசாமி பாஜகவுக்கு மதச்சார்பற்ற ஜனதா தள உறுப்பினர்கள் வெளியிலிருந்து ஆதரவு தருவதாக என்று வந்த செய்தியை மறுத்துள்ளார். இதுகுறித்து குமாரசாமி, “நாங்கள் பாஜகவுடன் கூட்டணி வைத்துள்ளோன் என்ற செய்தி என்  கவனத்திற்கு வந்தது. செய்தி அடிப்படை ஆதாரமற்றது. கட்சியில் எம்.எல்.ஏக்கள் மற்றும் கட்சித் தொண்டர்கள் இந்த வதந்திகளை நம்பக்கூடாது.இது உண்மைக்கு புறம்பானது. நாங்கள் தொடர்ச்சியாக மக்களுக்காக போராடுவோம் வேண்டும்” என்று ட்வீட் செய்துள்ளார்.



இதை தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய குமாரசாமி; "மதச்சார்பற்ற ஜனதா தளம், பாஜகவுக்கு ஆதரவளிப்பதாக தகவல்கள் வந்து கொண்டிருக்கின்றன. இது உண்மைக்கு புறம்பானது. அடிப்படை ஆதாரமற்றது. மதச்சார்பற்ற ஜனதா தள எம்.எல்.ஏக்கள் இது போன்ற வதந்திகளை நம்ப வேண்டாம். மக்களுக்காக நாம் தொடர்ந்து பணியாற்றுவோம். எடியூரப்பா தலைமையிலான அரசு மக்களுக்கு நல்லது செய்யும் பட்சத்தில், அதனை நாங்கள் வரவேற்போம். கட்சியும் அடிமட்டத்தை வலுவாக்க முயற்சி செய்வோம்" என்று தெரிவித்தார். 


மேலும், முதலமைச்சராக எடியூரப்ப பதவியேற்ற நிலையில் நாளை நம்பிக்கை வாக்கெடுப்பில் தன் பெரும்பான்மையை நிரூபிப்பார்.