நம்பிக்கை வாக்கெடுப்பில் பாஜக அரசு பெரும்பான்மையை நிரூபித்ததால் கர்நாடக பேரவை சபாநாயகர் ரமேஷ்குமார் தனது பதவியை ராஜினாமா செய்தார்!!


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

கர்நாடகாவில் நான்காவது முறையாக முதலமைச்சராக பதவியேற்ற எடியூரப்பா சட்டசபையில் உள்ள 105 பாஜக எம்எல்ஏக்களின் ஆதரவையும் பெற்று தனது ஆட்சியை தக்க வைத்துக் கொண்டுள்ளார்.


முன்னதாக, கர்நாடகாவில் காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த எட்டு சட்டமன்ற உறுப்பினர்களும், மதச்சார்பற்ற ஜனதா தளத்தைச் சேர்ந்த மூன்று சட்டமன்ற உறுப்பினர்களும் தங்கள் பதவி விலகல் கடிதத்தை சட்டமன்ற சபாநாயகர் அலுவலகத்தில் அளித்த நிலையில் கர்நாடக மாநிலத்தில் ஆட்சியில் இருந்த காங்கிரஸ் - மதச்சார்பற்ற ஜனதா தள கூட்டணி அரசுக்கு சிக்கல் எழுந்தது.


அதைத் தொடர்ந்து கர்நாடக சட்டசபையில் குமாரசாமி அரசின் மீதான நம்பிக்கை வாக்கெடுப்பு கோரப்பட்டது. நம்பிக்கை வாக்கெடுப்பில் தோல்வியுற்றதால் அவர் தனது முதலமைச்சர் பதவியை ராஜிநாமா செய்தார். 


இதையடுத்து, 105 எம்எல்ஏக்களின் ஆதரவுடன் கர்நாடக பாஜக தலைவர் எடியூரப்பா நான்காவது முறையாக முதலமைச்சராக பொறுப்பேற்றுள்ளார். எடியூரப்பா அரசு மீதான நம்பிக்கை வாக்கெடுப்பு கர்நாடக சட்டப்பேரவையில் இன்று நடைபெறுகிறது.


ஏற்கனவே 3 எம்.எல்.ஏ.க்கள் தகுதி நீக்கம் செய்யப்பட்ட நிலையில், நேற்று மேலும் 14 எம்.எல்.ஏ.க்களை சபாநாயகர் ரமேஷ் குமார் தகுதிநீக்கம் செய்தார். அவர்கள் 2023 ஆம் ஆண்டு வரை அவர்கள் தேர்தலில் போட்டியிட முடியாது என்றும் அவர் அறிவித்தார். 17 பேர் தகுதி நீக்கத்தால் கர்நாடக சட்டப்பேரவை பலம் 208 ஆக குறைந்துள்ளது. இந்நிலையில், நம்பிக்கை வாக்கெடுப்பில் எடியூரப்பா அரசுக்கு வெற்றி. குரல் வாக்கெடுப்பு மூலம் எடியூரப்பா தாக்கல் செய்த நம்பிக்கை வாக்கெடுப்பு தீர்மானம் நிறைவேறியது. 


இதை தொடர்ந்து, நம்பிக்கை வாக்கெடுப்பில் பாஜக அரசு பெரும்பான்மையை நிரூபித்ததால் கர்நாடக பேரவை சபாநாயகர் ரமேஷ்குமார் தனது பதவியை ராஜினாமா செய்துள்ளார்.