பிரதமர் மோடியின் பதவியேற்பு விழாவில் நான்கு நாட்டு அதிபர்கள், மூன்று நாட்டு பிரதமர்கள் மற்றும் ராஜ தூதுவர் பங்கேற்கவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது!


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

நடந்து முடிந்த மக்களவைத் தேர்தலில் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி 353 இடங்களில் வெற்றி பெற்றுள்ளது. ஆட்சி அமைக்க 272 இடங்கள் தேவை என்ற போதிலிலும் பாஜக 303 இடங்களை கைப்பற்றி பெரும்பான்மை பலத்தோடு ஆட்சி அமைக்க உள்ளது.


இதன் மூலம் தேசிய ஜனநாயக கூட்டணி ஆட்சியை தக்க வைத்து, மீண்டும் பிரதமராக நரேந்திர மோடி பதவியேற்கவுள்ளார். நாளை மாலை 7 மணிக்கு குடியரசுத் தலைவர் மாளிகையில் நடைபெறும் விழாவில் மோடி பிரதமராக பதவியேற்க உள்ளார். 


இந்த விழாவிற்கான ஏற்பாடுகள் குடியரசுத் தலைவர் மாளிகையில் தீவிரமாக நடைப்பெற்று வருகிறது. இதையொட்டி டெல்லியில் பாதுகாப்பு ஏற்பாடுகள் பலப்படுத்தப்பட்டுள்ளன. இந்த விழாவில் பங்கேற்க வெளிநாட்டு தலைவர்கள், பிம்ஸ்டெக் கூட்டமைப்பு தலைவர்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. 


இந்நிலையில் பிரதமர் மோடியின் பதவியேற்பு விழாவில் நான்கு நாட்டு அதிபர்கள், மூன்று நாட்டு பிரதமர்கள் பங்கேற்கவுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. கிடைக்கப்பெற்ற தகவல்கள் படி மோடி பதவியேற்பு விழாவில் வங்கதேச அதிபர் மொகமது அப்துல் ஹமீது, இலங்கை அதிபர் மைத்திரிபால சிறிசேன, கிர்கிஸ்தானின் அதிபர் சோரன் பேய் ஜீன்பெவ்வ் மற்றும் மியான்மர் அதிபர் யூ வின் மைன்ட் ஆகியோர் பங்கேற்கின்றனர்.


அதேவேலையில் மொரிஷியஸ் பிரதமர் பிரவீன் குமார் ஜுக்நொத், நேபாள பிரதமர் கே.பீ. ஷர்மா ஓலி மற்றும் பூட்டான் பிரதமர் லாட்டே செர்ரிங் ஆகியோரும் நிகழ்ச்சியில் இடம்பெறுகின்றனர். இவர்களுடன் BIMSTEC தலைவர்களும் பங்கேற்கவுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.


தேர்தல் முடிவுகள் கடந்த மே 23-ஆம் தேதி அறிவிக்கப்பட்டதில் இருந்தே நரேந்திர மோடிக்கு உலக தலைவர்களிடமிருந்து வாழ்த்துக்கள் வந்த வண்ணம் உள்ளது. 


மோடியின் வாழ்த்து தெரிவிக்கும் விதமாக நேபாள தூதர் நில்ம்பார் ஆச்சார்யா, "நாங்கள் நெருக்கமான உறவுகளைக் கொண்டுள்ளோம், நரேந்திர மோடியின் இரண்டாம் கட்ட பயணத்தில் எங்கள் உறவு இன்னும் அதிகரிக்கும் என்று நாங்கள் நம்புகிறோம்" என குறிப்பிட்டுள்ளார்.


இதற்கிடையில், இலங்கைத் தூதர் ஆஸ்டின் பெர்னாண்டோ, "நாங்கள் நண்பர்கள் மட்டும் அல்ல, அண்டை நாட்டவர்களும் கூட. அதுமட்டுமல்லாது உறவினர்களும் கூட என்பதை நினைவில் கொள்ள வேண்டும், பிரதமர் நரேந்திர மோடியின் இரண்டாவது பதவிக்காலத்தின் கீழ் எதிர்காலத்திலும் இரு நாடுகளுடனும் நல்ல உறவு இருக்குமாம்." என குறிப்பிட்டுள்ளார்.


நாளை மாலை பிரதமாராக பதவியேற்கவுள்ள மோடி, பதவியேற்பு நிகழ்விற்கு முன்னதாக ராஜ்கட்டில் உள்ள மகாத்மா காந்தியின் நினைவிடத்திலும், இதைத்தொடர்ந்து அட்டல் சமாதியில் உள்ள முன்னாள் பிரதமர் அடல் பிஹாரி வாஜ்பாயியின் நினைவிடத்திலும், இந்தியா வாயில் முன்னால் தேசிய போர் நினைவகம் முன்பு ராணுவ வீரர்களுக்கும் மரியாதை செலுத்துகின்றார்.