சபரிமலை ஐயப்பன் கோயிலுக்கு செல்ல முயன்ற 2 பெண் பக்தர்களை போராட்டக்காரர்கள் தடுத்து நிறுத்தினர்....


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

சபரிமலை ஐயப்பன் கோவிலுக்குள் அனைத்து வயது பெண்களையும் அனுமதிக்க வேண்டும் என்று கடந்த செப்டம்பர் மாதம் 28 ஆம் தேதி உச்சநீதிமன்றம் தீர்ப்பு வழங்கியது. தீர்ப்பை எதிர்த்து தேசிய ஐயப்ப பக்தர்கள் சங்கம் உள்ளிட்ட பல்வேறு தரப்பினர் சார்பில் 48 சீராய்வு மனுக்கள் உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டு பின்னர் இந்த மனுக்களை விசாரணைக்கு ஏற்பதாக என்று தலைமை நீதிபதி ரஞ்சன் கோகய் தலைமையிலான அமர்வு முடிவு செய்தது. மேலும் வரும் ஜனவரி மாதம் 22 ஆம் நாள் முதல் சீராய்வு மனுக்கள் மீது விசாரணை நடைபெறும் என்றும் அறிவித்துள்ளனர்.


இதனையடுத்து சபரிமலை செல்வதற்கு ஆண்களும், பெண்களுமாய் ஆன்லைன் மூலம் விண்ணப்பித்து வருகின்றனர். இந்நிலையில், கடந்த வாரம் திருநங்கைகள் 4 பேர் சபரிமலைக்கு தரிசனம் செய்ய முயன்றபோது காவல்துறையினரால் தடுக்கப்பட்டனர். இதன் பின்னர் உயர் நீதிமன்ற குழுவினர் முறையிட்டதையடுத்து, பலத்த பாதுகாப்புடன் திருநங்கைகள் 4 பேரும் மறுநாள் தரிசனம் செய்தனர்.


இந்நிலையில், தமிழகத்தைச் சேர்ந்த 11 பெண்கள் நேற்று சபரிமலை சென்றனர். அவர்களை ஐயப்ப பக்தர்கள் தடுத்தி நிறுத்தி போராட்டத்தில் ஈடுபட்டனர். இதையடுத்து, போராட்டத்தில் ஈடுபட்டவர்களை காவல்துறையினர் கைது செய்தனர். சன்னிதானம் செல்லும் பெண் பக்தர்களுக்கு பலத்த போலீஸ் பாதுகாப்பு அளிக்கப்படும் எனவும் மாநகர காவல் ஆணையர் தெரிவித்திருந்தார். 



இதையடுத்து இன்று சபரிமலை ஐயப்பன் சன்னிதானத்துக்கு போராட்டக்காரர்களின் கடும் எதிர்ப்பை மீறி பலத்த போலீஸ் பாதுகாப்புடன் சென்ற 2 பெண்கள் மற்றொரு பிரிவு போராட்டக்காரர்களால் தடுத்து நிறுத்தப்பட்டனர். இதனால் சபரிமலையில் தொடர் பதற்றம் நிலவி வருகிறது. சபரிமலை கோயிலில் இருந்து 2 கி.மீ. தொலைவில் உள்ள அப்பச்சிமேட்டில் 2 பெண் பக்தர்களும் தடுத்து நிறுத்தப்பட்டனர்.