சமூக வலைதளங்களில் வலம் வந்த போலி செய்தி குறித்து விசாரிக்க டெல்லி காவல்துறையிடம் தேர்தல் ஆணையம்....


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

டெல்லி: சமூக ஊடகங்களில் மக்களவைத் தேர்தல் தேதி தொடர்பான பொய்யான செய்திகள் பரப்பப்படுவதை கவனத்தில் கொண்டுள்ள தேர்தல் ஆணையம், இது தொடர்பான விசாரணைக்கு உத்தரவிட்டுள்ளது. 


முகநூல், கட்செவியஞ்சல் போன்ற சமூக வலைதளங்களில் கடந்த 15 ஆம் தேதி தேர்தல் தேதி குறித்த செய்தி மிக வேகமாக பகிரப்பட்டது. நாடாளுமன்றத் தேர்தல் ஏப்ரல் 7 ஆம் தேதி தொடங்கி, மே 17 ஆம் தேதியில் முடிவடைவதாக அந்தச் செய்தியில் தெரிவிக்கப்பட்டிருந்தது. மேலும், மாநிலங்கள் வாரியாக தேர்தல் நடத்தப்படும் அட்டவணையும் அதில் இடம்பெற்றிருந்தது. ஆனால், இந்த செய்தி போலியானது என்று தேர்தல் ஆணையம் மறுப்பு தெரிவித்திருந்தது.


இந்நிலையில், தேர்தல் ஆணையம் சார்பில் டெல்லி தலைமை தேர்தல் அதிகாரிக்கு இது குறித்து எழுதப்பட்டுள்ள கடிதத்தில், காவல்துறையிடம் புகார் அளிக்குமாறு உத்தரவிடப்பட்டிருந்தது. அதன் அடிப்படையில், டெல்லி தலைமை தேர்தல் அதிகாரியின் அலுவலகத்தில் உள்ள சரன்ஜித் சிங் என்ற அதிகாரி சார்பில் டெல்லி காவல்துறையின் சிறப்பு பிரிவு மற்றும் தொழில்நுட்பப் பிரிவில் புகார் அளிக்கப்பட்டுள்ளது. 


போலி செய்தியை வெளியிட்டவர்களை கண்டறிந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது. காவல்துறை மூலமாக நடவடிக்கை எடுப்பதால், இனி இதுபோன்ற போலி செய்திகள் கட்டுக்குள் வரும் என்று தேர்தல் ஆணையம் கருதுகிறது.


இத்தகைய செய்திகளைப் பரப்பும் முகம் அறியாத நபர்கள் குறித்து விசாரணை நடத்தவும், வதந்திகளைப் பரப்புவோரை தண்டிக்க சட்டங்களை பயன்படுத்தவும் தேர்தல் அதிகாரிகளுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.