பெட்ரோல், டீசல் விலை உயர்வைக் கண்டித்து காங்கிரஸ் கட்சி சார்பில் நடைபெறும் நாடுதழுவிய பாரத் பந்திற்கு பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிப்பு...!


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

பெட்ரோல், டீசல் விலை உயர்வைக் கண்டித்து காங்கிரஸ் கட்சி சார்பில் இன்று (செப்டம்பர் 10 ஆம் தேதி) நாடு தழுவிய “பாரத் பந்த்” அறிவித்திருந்தது. வரலாறு காணாத அளவுக்கு பெட்ரோல், டீசல் விலை உயர்ந்து வருகிறது. இந்த விலை உயர்வுக்கு பல தரப்பினர் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றநிலையில் பெட்ரோல், டீசல் விலை உயர்வை கண்டித்து நாடு தழுவிய அளவில் போராட்டம் நடத்தப்படும் என காங்கிரஸ் கட்சி தரப்பில் தெரிவித்திருந்தது.


இது குறித்து காங்கிரஸ் கட்சி செய்தி தொடர்பாளர் ரன்தீப் சுர்ஜ்வாலா கூறுகையில், பெட்ரோல், டீசல் மற்றும் சமையல் எரிவாயு விலை உயர்வால் சாதாரண மக்கள் மிகுந்த பாதிப்புக்கு உள்ளாகி வருகின்றனர். எனவே காங்கிரஸ் கட்சி சார்பில் வருகிற செப்டம்பர் 10 ஆம் தேதி நாடு தழுவிய அளவில் கடையடைப்பு போராட்டம் நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது.


ரூ.11 லட்சம் கோடி எரிபொருள் திருட்டு, கலால் வரி மற்றும் வாட் வரியை உடனடியாக குறைக்க வேண்டும் மற்றும் பெட்ரோல், டீசல் விலையை ஜிஎஸ்டி வரம்பிற்குள் கொண்டுவர வேண்டும்  எனவும் இந்த போராட்டம் மூலம் வலியுறுத்தப்படும். இதில் அனைவரும் பங்கேற்க வேண்டும் என தெரிவித்திருந்தனர். 


இதையடுத்து, இன்று நாடு தழுவிய பந்த் கடைபிடிக்கப்பட்டு வருகின்றது. இந்நிலையில், கர்நாடகாவில் பேருந்துகள் இயக்கப்படவில்லை. இதனால், சாலைகள் வெறிச்சோடி காணப்படுகின்றன. ஒடிசாவில், காங்கிரஸ் கட்சியினர் சம்பல்பூர் ரயில் நிலையத்தில், ரயிலை மறித்து போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். ஆந்திர மாநிலம் விசாகப்பட்டினத்தில் சிபிஐ(எம்) கட்சியினர் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். 


மேலும், பெங்களூரில் நாடு தழுவிய பந்தை முன்னிட்டு இன்று பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை விடப்பட்டுள்ளது...!