டெல்லியில் முன்னாள் நிதியமைச்சர் ப.சிதம்பரம் இல்லத்துக்கு சிபிஐ அதிகாரிகள் மீண்டும் வருகை!!


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

மும்பையை சேர்ந்த இந்திராணி முகர்ஜி, அவரது கணவர் பீட்டர் முகர்ஜி ஆகியோரின் ஐஎன்எக்ஸ் மீடியா தொலைக்காட்சி நிறுவனத்திற்கு, 305 கோடி ரூபாய் வெளிநாட்டு நிதி திரட்டுவதற்கு அன்னிய நேரடி முதலீட்டு மேம்பாட்டு வாரியத்தின் அனுமதி பெறப்பட்டது.


2007 ஆம் ஆண்டு காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சிக் காலத்தில் மத்திய நிதி அமைச்சராக இருந்த ப.சிதம்பரம், நிதி திரட்ட விதிமுறைகளை மீறி ஒப்புதல் அளித்ததாக குற்றச்சாட்டு எழுந்தது. மேலும், இதற்காக ப.சிதம்பரத்தின் மகன் கார்த்தி சிதம்பரத்திற்கு சொந்தமான நிறுவனத்திற்கு 10 லட்சம் ரூபாய் லஞ்சம் கொடுக்கப்பட்டதாகவும் குற்றம்சாட்டப்பட்டது. இந்த முறைகேடு தொடர்பாக 2017 ஆம் ஆண்டு மே 15 ஆம் தேதி சிபிஐ முதல் தகவல் அறிக்கையை பதிவு செய்தது.


அதன் அடிப்படையில் 2018 ஆம் ஆண்டு சட்டவிரோத பணபரிமாற்ற தடுப்பு சட்டத்தின் கீழ் அமலாக்கத்துறையும் வழக்குப்பதிவு செய்தது. இதையடுத்து சிபிஐ தன்னை கைது செய்வதை தடுப்பதற்காக ப.சிதம்பரம் டெல்லி உயர்நீதிமன்றத்தில் முன்ஜாமின் கேட்டு மனு தாக்கல் செய்திருந்தார். இந்த மனு நேற்று விசாரணைக்கு வந்தபோது, ப.சிதம்பரம் விசாரணைக்கு ஒத்துழைக்க மறுப்பதாகவும், காவலில் எடுத்து அவரை விசாரிக்க வேண்டியிருப்பதாகவும் சி.பி.ஐ. மற்றும் அமலாக்கத்துறை சார்பில் வாதிடப்பட்டது. இதையடுத்து ப.சிதம்பரத்திற்கு முன்ஜாமீன் மனுவை தள்ளுபடி செய்து நீதிபதி உத்தரவிட்டார்.


நேற்று நள்ளிரவு சிதம்பரம் கைது செய்யப்படலாம் என்ற பரபரப்பு நிலவியது. அவருடைய வீட்டுக்கு சென்ற 4 சிபிஐ அதிகாரிகள் சிதம்பரம் வீட்டில் இல்லை என்று அறிந்தனர். அவருடைய செல்போனும் அணைத்து வைக்கப்பட்டிருந்ததால் தொடர்பு கொள்ள முடியவில்லை. இதனால் 2 மணி நேரத்திற்குள் விசாரணைக்கு ஆஜராகும்படி ப.சிதம்பரம் வீட்டு கதவில் நோட்டீஸ் ஒட்டப்பட்டது.


இதையடுத்து, இதனிடையே, முன்னாள் நிதி மந்திரி ப. சிதம்பரம் இல்லத்திற்கு 6 பேர் கொண்ட சி.பி.ஐ. அதிகாரிகள் அடங்கிய குழு இன்று காலை மீண்டும் சென்றுள்ளது.