ஐஎன்எக்ஸ் மீடியா விவகாரத்தில் கார்த்தி சிதம்பரத்தின் வழக்கறிஞர் உச்சநீதிமன்றத்தில் கேவியட் மனுவை தாக்கல் செய்துள்ளார்.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

ஐ.என்.எக்ஸ் மீடியா வழக்கு விசாரணை தொடர்பாக முன்னாள் மத்திய நிதி மந்திரி ப.சிதம்பரத்தின் மகன் கார்த்தி சிதம்பரம் நேரில் ஆஜராகி விளக்க வேண்டும் என்று மத்திய அமலாக்கத்துறை சம்மன் அனுப்பி உள்ளது.


இதை எதிர்த்து கார்த்தி சிதம்பரம் சுப்ரீம் கோர்ட்டில் புதிய ரிட் மனு ஒன்றை தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா, நீதிபதிகள் ஏ.எம்.கன்வில்கர், டி.ஒய்.சந்திரசூட் ஆகியோர் அமர்வு முன்பாக அவருடைய வக்கீல் முன்பு தாக்கல் செய்தார். 


அதில், சி.பி.ஐ. வழக்குப்பதிவு செய்ததன் அடிப்படையில் இதுபோன்ற சம்மன்களை அமலாக்கத்துறை அனுப்புவதற்கு எவ்வித அதிகார வரம்பும் கிடையாது. எனவே இந்த சம்மன்களை தள்ளுபடி செய்யவேண்டும் என்று கூறி இருந்தார்.


ஆனால், தனது மனுவை திரும்பப்பெற்ற கார்த்தி சிதம்பரம், டெல்லி உயர் நீதிமன்றத்தில் புதிய மனுவை தாக்கல் செய்தார். இந்த மனு இன்று விசாரணைக்கு வந்தது. இந்த மனுவை விசாரித்த நீதிபதிகள், அமலாக்கத்துறை கார்த்தி சிதம்பரத்தை கைது செய்ய இடைக்கால தடை விதித்து. 


மேலும், சிபிஐ விசாரணையில் இருக்கும் கார்த்தி சிதம்பரம் ஜாமினில் வெளிவரும் பட்சத்தில் வரும் 20-ம் தேதி வரை அவரை கைது செய்யக்கூடாது எனவும் டெல்லி உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது. 


இந்நிலையில், ஐஎன்எக்ஸ் மீடியா வழக்கில் வரும் 20 வரை கைது செய்ய விதிக்கப்பட்ட தடையை எதிர்த்து அமலாக்கத்துறை மேல்முறையீடு செய்தால் தங்கள் தரப்பு வாதத்தை கேட்காமல் உத்தரவு பிறப்பிக்கக் கூடாது என்று கார்த்தி சிதம்பரம் தரப்பில் கேவியட் மனுத் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.


உச்சநீதிமன்றத்தில் கார்த்தி சிதம்பரத்தின் வழக்கறிஞர் இந்த கேவியட் மனுவை தாக்கல் செய்துள்ளார்.