காலா திரைப்படத்திற்கு எதிர்ப்பு தெரிவித்த கன்னட அமைப்பினர் திரையரங்குகளிலிருந்து ரசியர்களை வெளியேற்றி திரையரங்குகள் முன் போராட்டத்தில் ஈடுபட்டனர்.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

 



 


கபாலி படத்தைத் தொடர்ந்து ரஜினி நடிப்பில் பா.ரஞ்சித் இயக்கத்தில் உருவாகி உள்ள திரைப்படம் ‘காலா’. தனுஷ் தயாரித்துள்ள இந்தத் திரைப்படத்திற்கு சந்தோஷ் நாராயணன் இசையமைத்துள்ளார். இப்படத்தில் ரஜினியுடன் ஹியூமா குரேஷி, ஈஸ்வரி ராவ், சமுத்திரக்கனி உள்ளிட்ட நட்சத்திரங்கள் நடித்துள்ளனர். 


தமிழ், தெலுங்கு, ஹிந்தி என மூன்று மொழிகளில் உருவாகி உள்ள இந்தத் திரைப்படம் உலகம் முழுவதும் இன்று வெளியானது. தமிழகம் முழுவதும் 500-க்கும் மேற்பட்ட  திரையரங்குகளில் வெளியானது. மேலும் காலா திரைப்படத்தின் சிறப்பு காட்சிகள் சென்னை புறநகர் பகுதிகளில் உள்ள திரையங்குகளில் இன்று அதிகாலை  வெளியானது. உலகம்  முழுவதிலும் காலை 7 மணிக்கு முதல் காட்சி வெளியானது. காலா திரைப்படத்தின் சிறப்பு காட்சிகள் தமிழகம்,  மகாராஷ்டிரா, டெல்லி உள்ளிட்ட இடங்களில் வெளியானது. 


முன்னதாக காவிரி விவகாரத்தில் ரஜினிகாந்த் தமிழகத்திற்கு ஆதரவாக குரல் கொடுத்த நிலையில் கர்நாடகாவில் காலா படம் வெளியாவதற்கு எதிர்ப்பு கிளம்பியது. இதனை தொடர்ந்து இந்த படத்திற்கு தடை விதிக்கும்படி கன்னட அமைப்புகள் போராட்டம் நடத்தின. இதையடுத்து கர்நாடக திரைப்பட வர்த்தகசபை அந்த படத்திற்கு தடை விதித்தது. எனினும், காலா படம் வெளியாகும் போது கர்நாடக தியேட்டர்களுக்கு பாதுகாப்பு அளிக்க வேண்டும் என்று படத்தின் தயாரிப்பாளரான தனுஷ் தொடர்ந்த வழக்கில் கர்நாடக அரசுக்கு அம்மாநில உயர்நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது.  


இந்த நிலையில், காலா படம் உலகெங்கிலும் இன்று வெளியானது. அதேசமயம் கர்நாடகாவில் காலா படம் வெளியாகும் திரையரங்குகள் முன் கன்னட அமைப்பினர் போராட்டத்தில் ஈடுபட்டு உள்ளனர். இதனை அடுத்து அங்கு வந்த போலீசார் அவர்களை அமைதிப்படுத்தி அங்கிருந்து திரும்பி செல்ல செய்தனர்.