வரவிருக்கும் டெல்லி சட்டமன்றத் தேர்தலுக்கான வேட்பு மனு தாக்கல், நாளை(13.01.2020) 70 சட்டமன்றத் தொகுதிகளின் ரிட்டனிங் அதிகாரிகளின் அலுவலகத்தில் தொடங்கும். இந்த செயல்முறை காலை 11 மணி முதல் பிற்பகல் 3 மணி வரை நடைபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

வேட்புமனு தாக்கல் செய்வதற்கான கடைசி தேதி ஜனவரி 21 என நிர்ணயிக்கப்பட்டுள்ளது. குறித்த தேதியில் தாக்கல் செய்யப்பட்ட வேட்பு மனுவை ஆராய்வதற்கான தேதி ஜனவரி 22 எனவும்,  வேட்புமனுவை வாபஸ் பெறுவதற்கான கடைசி தேதி ஜனவரி 24 எனவும் முன்னதாக தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.


டெல்லி முழுவதும் வேட்புமனுக்களை ஏற்றுக்கொள்ளும் 70 ரிட்டனிங் அலுவலர்களின் அலுவலகங்கள் வேட்பு மனுக்களை ஏற்றுக் கொள்ளும் நிலை குறித்த பட்டியல் பொது அறிவிப்பு வடிவில் வெளியிடப்பட்டுள்ளது.


70 உறுப்பினர்களைக் கொண்ட டெல்லி சட்டமன்றத்தின் பதவிக்காலம் பிப்ரவரி 22-ஆம் தேதியுடன் முடிவடைகிறது, அதற்கு முன்னர் ஒரு புதிய சபை அமைக்கப்பட வேண்டும் என்ற நோக்கில் தற்போது டெல்லி சட்டமன்றத்திற்கான தேர்தல் நடத்தப்படவுள்ளது. 


டெல்லி சட்டபேரவைக்கான தேர்தல் ஒரு கட்டமாக நடைபெறும். வாக்குப்பதிவு பிப்ரவரி 8-ஆம் தேதியும், வாக்கு எண்ணிக்கை பிப்ரவரி 11-ஆம் தேதியும் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.


இந்திய தேர்தல் ஆணைய அறிவிப்பின் படி ஜனவரி 6, 2020 நிலவரப்படி டெல்லியின் இறுதி வாக்காளர் பட்டியலில் மொத்த வாக்காளர்கள் 1,46,92,136-ஆக பதிவு செய்யப்பட்டுள்ளன. 2,689 இடங்களில் அமைக்கப்படும் 13,750 வாக்குச்சாவடிகளில் வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. 


முன்னதாக, 2015 டெல்லி சட்டமன்றத் தேர்தலில், அரவிந்த் கெஜ்ரிவால் தலைமையிலான ஆம் ஆத்மி கட்சி மாநில சட்டப்பேரவையில் மொத்தம் 70 இடங்களில் 67 இடங்களை வென்று டெல்லியில் ஆட்சி பிடித்தது. முதலமைச்சர் கெஜ்ரிவாலின் ஆளும் ஆம் ஆத்மி கட்சி 2015-ல் பாரிய வெற்றியைப் பதிவு செய்த பின்னர் தற்போது மீண்டும் தேர்தலை எதிர்கொள்கிறது.


டெல்லியின் ஆளும் கட்சியான ஆம் ஆத்மி கட்சி மற்றும் பாஜக மற்றும் காங்கிரஸ் ஆகியவை சட்டசபை தேர்தலுக்கான தேதிகளை அறிவிப்பதற்கு முன்பே வீடு வீடாகச் சென்று தங்கள் பிரச்சாரங்களை துவங்கியுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.