பயங்கரவாதிகள் கையில் அணு மற்றும் வேதியியல் ஆயுதங்கள் கிடைத்தால் பேரழிவு ஏற்படும் என்று இந்திய ராணுவ தலைமை தளபதி பிபின் ராவத் எச்சரிக்கை விடுத்து உள்ளார்.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

புதுடெல்லியில் நடைபெற்று வரும் ராய்சினா மாநாட்டில் ராணுவ தளபதி பிபின் ராவத் கலந்து கொண்டு பேசினார். அப்போது அவர் பேசியதாவது:-


சர்வதேச எல்லையில் பயங்கரவாதிகள் நவீன ஆயுதங்களை பயன்படுத்துகின்றனர். பயங்கரவாதிகள் அதிக தொழில்நுட்பத்தை பயன்படுத்தி சர்வதேச எல்லையை கடந்து செல்லும் அமைப்புகளை பயன்படுத்துகின்றனர்.


பயங்கரவாதிகளையும், அவர்களுக்கு உதவுபவர்களையும் தடுக்க வேண்டும்.


அணு மற்றும் வேதியியல் ஆயுதங்கள் பயங்கரவாதிகள் சிக்கினால், அது மனித இனத்திற்கு பேரழிவாக முடியும். பயங்கரவாத அமைப்புகள் பயன்படுத்தும் இணையதள சேவை மற்றும் சமூக வலைதளங்களுக்கு சில கட்டுப்பாடு விதிப்பதுடன் தொடர்ந்து ஆய்வு செய்ய வேண்டும்.


பயங்கரவாத அமைப்புகள் சில இணையதள சேவைகளையும், சமூக வலைதளங்களையும் பயன்படுத்தி வருகின்றன. அவற்றை ஆய்வு செய்து கட்டுப்பாடுகளை விதிக்க வேண்டும். ஆனால் இந்த ஜனநாயக நாட்டில், இதுபோன்ற கட்டுப்பாடுகளை மக்கள் விரும்புவதில்லை.


பாதுகாப்பான மற்றும் அச்சுறுத்தல் இல்லாத சூழ்நிலை வேண்டுமா அல்லது தற்காலிக கட்டுப்பாடுகளை அவ்வபோது ஏற்க வேண்டுமா என்பதை மனதில் வைத்து இந்த விவகாரத்தில் முடிவு எடுக்க வேண்டும். இதன் மூலம் பயங்கரவாதிகளை கையாளலாம். இவ்வாறு அவர் கூறினார்.