ரிலையன்ஸ் ஜியோ நிறுவனம் தற்போது வாடிக்கையாளர்களுக்கு சலுகைகள் பல கொடுத்து கவர்ந்து வரும் நிலையில் பதாஞ்சலி நிறுவனமும் தற்போது புதி சிம்முடன் களத்தில் இறங்கியுள்ளது!


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

யோகா குரு பாபா ராம்தேவ் அவர்களின் பதஞ்சலி நிறுவனமான கடந்த 2006-ஆம்  ஆண்டு துவங்கி பற்பசை, தேன், நூடுல்ஸ், கூந்தல் தைலம், சமையல் எண்ணெய், சோப்பு உள்ளிட்ட பல்வேறு பொருட்களை விற்பனை செய்து வருகிறது.


பதஞ்சலி நிறுவனத்தில் வெளிவரும் பொருட்கள் ரசாயனக் கலப்பு இல்லாமல் தயாரிக்கப்படுவதாகவும், இயற்கையான முறையில் உள்நாட்டில் தயாராகும் பொருட்கள் என்றும் விளம்பரபடுத்தப் படுகிறது.


இதனால் நாடு முழுவதும் ஏராளமான மக்கள் நம்பிக்கையுடன் பதஞ்சலி பொருட்களை வாங்கி சென்று பயன்படுத்தி வருகின்றனர்.


இந்நிலையில், தற்போது பதாஞ்சலி நிறுவனம் தொலைத்தொடர்பு துறையிலும் அடி எடுத்து வைத்துள்ளது. BSNL நிறுவன உதவியுடன் சுதேதி சம்ரித்தி என்ற சிம் கார்டை இந்நிறுவனம் அறிமுகம் செய்துள்ளது. 


இந்த சிம் கார்டில் ரூ.144 செலுத்தி அன்லிமிடெட் அழைப்புகள், 2 ஜிபி டேட்டா, தினமும் 100 எஸ்.எம்.எஸ்.கள் என பல்வேறு அதிரடி சிறப்பு அம்சங்கள் இடம்பெற்றுள்ளது. தற்போது ரிலையன்ஸ் நிறுவனம் அதிரடி சலுகைகளை அறிவித்து வரும் நிலையில் தற்போது பதாஞ்சலி முன்னெடுத்துள்ள நடவடிக்கை அனைவரது கவனத்தையும் ஈர்த்துள்ளது.  


முதற்கட்டமாக பதஞ்சலி நிறுவன ஊழியர்களுக்கு இந்த சிம்கார்டுகள் தற்போது வழங்கப்படுகிறது. விரைவில் பொதுமக்களின் பயன்பாட்டுக்கு வரும் என அறிவிக்கப்பட்டுள்ளது.