முன்னாள் பிரதமர்களுக்கு பிரமாண்ட அருங்காட்சியகம் அமைக்கப்படும் என பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

முன்னாள் பிரதமர் சந்திர சேகர் பற்றி முன்னாள் துணை சபாநாயகர் ஹரிவன்ஷ் மற்றும் எழுத்தாளர் ரவிதத் பாஜ்பாய் ஆகியோரால் எழுதப்பட்ட Chandra Shekhar - The last icon of Ideological politics என்ற புத்தகத்தின் வெளியீட்டு விழா நடைபெற்றது. இவ்விழாவில் பிரதமர் மோடி, குடியரசு துணைத் தலைவர் வெங்கய்யா நாயுடு ஆகியோர் கலந்து கொண்டனர்.


இந்நிகழ்ச்சியில் பிரதமர் மோடி பேசுகையில்; இந்திய நாட்டின் வளர்ச்சிக்காக உழைத்த முன்னாள் பிரதமர்களை கட்சி வேறுபாடுகளைக் கடந்து கவுரவிக்கும் விதமாகவும், அவர்களது உழைப்பை நாட்டு மக்களுக்கு தெரியப்படுத்தும் விதமாகவும் டெல்லியில் மிகப்பெரிய அருங்காட்சியகம் அமைக்கப்படும் என்று பிரதமர் மோடி தெரிவித்தார். மேலும் பேசுகையில்; நாட்டில் ஜமாத் என்று ஒரு பிரிவு இருக்கிறது. அவர்கள் பிரதமர்கள் மீதான மதிப்பை குழைக்கும் விதமாக மோசமான தோற்றத்தை உருவாக்குகிறார்கள். இதனால் அவர்கள் செய்த நன்மைகள் நினைவுகூறப்படாமலேயே போய்விடுகிறது. எடுத்துக்காட்டாக, முன்னாள் பிரதமர் மொரார்ஜி தேசாய் நாட்டுக்கு என்ன செய்தார் என்பதைப் பற்றி பேசாமல் அவர் எதை குடித்தார் என்பது பற்றி பேசுகிறார்கள் அல்லது மீட்டிங் நடைபெற்றுக்கொண்டிருக்கும் போதே உறங்கிவிடுவார் என்று தான் பேசுவார்கள் என்று அவர் குற்றம்சாட்டினார்.


அதேபோல லால் பகதுர் சாஸ்திரி விசயத்திலும் அவர் செய்த சாதனைகளைப்பற்றி பேசமாட்டார்கள் பதிலாக தஷ்கெந்த் பற்றி பேசுவார்கள் என்று வருத்தம் தெரிவித்தார். அதன் காரணமாக தற்போது எல்லா பிரதமர்களையும் கவுரவிக்கும் விதமாக அருங்காட்சியகத்தை உருவாக்கி புதிய அரசியல் கலாச்சாரத்தை தொடங்க உள்ளதாக கூறியுள்ளார். மேலும், முன்னாள் பிரதம மந்திரிகளின் குடும்பத்தினர், பிரமர்கள் பற்றிய குறிப்புகளை கொடுக்குமாறும், அதை அருங்காட்சியகத்தில் வைத்தால் அவர்களது புகழ் நிலைத்திருக்கும் என்று பிரதமர் மோடி வேண்டுகோள் விடுத்துள்ளார்.


மேலும், முன்னாள் பிரதமர் சந்திரசேகர் பற்றி குறிப்பிடுகையில்“தற்போது ஒரு பேஷன் இருக்கிறது; சிலருக்கு விதிவிலக்குகள் இருக்கிறது. சில அரசியல் தலைவர்கள் 10 முதல் 12 கிலோமீட்டர்களுக்கு பாதையாத்திரை நடத்துகிறார்கள். அது 24 மணிநேரமும் ஊடகங்களில் ஒளிபரப்பப்படுகிறது; செய்தித்தாள்களின் முதல்பக்கத்தில் இடம்பிடிக்கிறது. ஆனால், சந்திரசேகர் ஏழைகள் மற்றும் கிராமங்களின் பிரச்சனையை முன்னிருத்தி பாதையாத்திரையை நடத்தினார். ஆனால் இந்த நாடு அவருக்கு உரிய மரியாதையை கொடுக்கத்தவறிவிட்டது. அதற்கான வாய்ப்பும் போய்விட்டது. பொதுவாழ்க்கையில் இருப்பவர்களுக்கு இழைக்கப்படும் அநீதி எரிச்சலூட்டுகிறது” என்று பிரதமர் மோடி தெரிவித்தார்.