பாஜக அரசை சீர்குலைக்க 'பணத்தையும் அதிகாரத்தையும்' பயன்படுத்துவதாக ராகுல் காந்தி குற்றம் சாட்டு!!


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

கர்நாடக சட்டமன்றத்தில் முதலமைச்சர் குமாரசாமி பெரும்பான்மை பலத்தை நிரூபிக்கப் போவதாக அறிவித்துள்ளார். காங்கிரஸ்- மதசார்பற்ற ஜனதா தள கூட்டணிக்கு 116 உறுப்பினர்கள் இருந்த நிலையில், அதிருப்தி எம்.எல்.ஏக்கள் 16 பேரின் ராஜினாமா ஏற்கப்பட்டால் அதன் பலம் 100 ஆக குறையும்.இரண்டு சுயேட்சை எம்.எல்.ஏக்களும் அரசுக்கு தங்கள் ஆதரவை விலக்கிக் கொண்டுள்ளனர். எனவே அந்த கூட்டணி பெரும்பான்மை தகுதியை இழந்துவிடும் என்று கூறப்படுகிறது.


வரும் செவ்வாய்க்கிழமைக்குள் எம்.எல்.ஏக்கள் ராஜினாமா குறித்து சபாநாயகர் முடிவெடுக்க வேண்டும் என்றும் அவர்களை தகுதி நீக்கம் செய்யக்கூடாது என்று உச்சநீதிமன்றம் தெரிவித்துள்ளது. தற்போதைய நிலையே நீடிக்க வேண்டும் என்றும் நீதிபதிகள் தெரிவித்துள்ளனர்.


இந்நிலையில், குஜராத் தலைநகர் அகமதாபாத்தில் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறுகையில்; காங்கிரஸ் ஆளும் மாநிலங்களின் ஆட்சியை கவிழ்க்க பாரதிய ஜனதா கட்சி முயற்சிக்கிறது. இதற்காக காங்கிரஸ் மற்றும் அதன் கூட்டணி கட்சிகளை சார்ந்த எம்.எல்.ஏ.க்களை மிரட்டல் மற்றும் பண பலத்தின் மூலம் தங்கள் வசம் இழுக்கப் பார்க்கிறது. முதலில் கோவாவில் காங்கிரஸ் ஆட்சியை கவிழ்த்து தங்கள் ஆட்சியை அமைத்தனர். 


தற்போது, காங்கிரஸ் மற்றும் மதச்சார்பற்ற ஜனதா தளம் கூட்டணி ஆட்சி செய்யும் கர்நாடக மாநிலத்திலும் மீண்டும் அதே போன்று ஆட்சியை கவிழ்க்கும் நடவடிக்கையில் ஈடுபட்டு வருகிறது. இதுதான் பாரதிய ஜனதா கட்சியின் அரசியல் செயல்பாடு என குற்றம் சாட்டினார்.