மத்திய அரசின் சார்பில் 48-வது சர்வதேச திரைப்பட விழா, கோவா தலைநகர் பனாஜியில் கடந்த 20-ம் தேதி தொடங்கியது. இத்திரைப்படவிழாவில் சுமார் 200 படங்கள்ளுக்கு மேல் திரையிடப்பட்டது.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

இந்த விழாவில் திரையிடப்படுவதற்கான பட்டியலில் இடம்பெற்றிருந்த "எஸ். துர்கா" என்ற மலையாளப் படத்தினை நீக்கம்செய்து, திரைப்படங்கள் திரையிடப்படும் என அதிகாரப்பூர்வ பட்டியலை மத்திய அரசு வெளியிட்டது.


இதனையடுத்து, பிரபல பாலிவுட் இயக்குநர் சுஜோய் கோஷ் கோவா திரைப்பட விழா தேர்வுக்குழு தலைவர் பதவியிலிருந்து விலகினார். அவரை தொடர்ந்து மேலும் இரு உறுப்பினர்கள் பதவி விலகினர். இதனால் கோவா திரைப்பட விழா தொடர்பாக சர்ச்சைகள் தொடங்க ஆரம்பித்தது.


இதனிடையே, "எஸ். துர்கா" படத்தின் இயக்குனர் சனல் குமார் சசிதரன், தனது படத்தினை தேர்வு பட்டியலில் இருந்து நீக்கியது தொடர்பாக மத்திய தகவல் ஒளிபரப்புத்துறை அமைச்சகத்தின் முடிவை எதிர்த்து கேரள உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.


இவ்வழக்கை விசாரித்த கேரள உயர்நீதிமன்றம், "எஸ் துர்கா" திரைப்படத்தை திரையிட வேண்டும் என உத்தரவு பிறப்பித்தது. இந்த உத்தரவை எதிர்த்து மத்திய அரசு சார்பில் கேரள உயர்நீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்யப்பட்டது. 


இந்த மனுவை விசாரித்த நீதிபதிகள் "கோவா சர்வதேச திரைப்பட விழா வரும் 28-ஆம் தேதி முடிவடைவதால் இறுதி செய்யப்பட்ட பட்டியலை மாற்றுவதும், எஸ்.துர்கா படத்தை இணைப்பதும் சாத்தியமற்றது. எனவே முன்னதாக கேரள உயர்நீதிமன்றம் அளித்த உத்தரவை ரத்து செய்யவேண்டும் என தாக்கல் செய்யப்பட்ட மனுவினை ரத்துசெய்த உயர்நீதிமன்ற அமர்வு, முன்னர் பிறப்பிக்கப்பட்ட உத்தரவுக்கு தடை விதிக்க முடியாது", என மறுத்துவிட்டது.


இந்த சச்சரவுகளுக்கு இடையில், இப்படம் கோவா திரைப்பட விழா நடுவர்களுக்கு காட்சிப்படுத்தப்பட்டது. அப்போது படத்தின் பெயர் திரையில் தோன்றும்போது S Durga என்பதற்கு பதிலாக "Sxxx Durga" என்று இடம்பெற்று இருந்தது. S என்ற ஆங்கில எழுத்துக்கு பின்னர் வரும் 3xxx - என்பது செக்ஸி என்ற அர்த்தத்தினை குறிக்கின்றது. என கூறி நடுவர் குழுவில் இருந்த 11 பேரில் 4 பேர் இந்தப் படத்தை திரையிட எதிர்ப்பு தெரிவித்தனர்.


மேலும், போட்டிக்கு இப்படத்தை அனுப்பும்போது "எஸ் துர்கா" என்றும் பின்னர் திரையில் "Sxxx Durga" என்றும் மாற்றப்பட்டது, தொடர்பாக இப்படத்துக்கு தணிக்கை சான்றிதழ் அளித்த திருவனந்தபுரம் சென்சார் போர்டுக்கு கோவா திரைப்பட விழா நடுவர்கள் புகார் அளித்தனர்.


இதையடுத்து, முன்னதாக தணிக்கை செய்தபோது அறிவுறுத்தப்பட்ட வெட்டுகள் மற்றும் இடைச்சொருகல்கள் இன்றி இப்படம் உருவாக்கப்பட்டுள்ளதாக இல்லையா? என்பதை மறுதணிக்கை செய்யும்வரை "எஸ் துர்கா" படத்தை திரையிட கூடாது என திருவனந்தபுரம் சென்சார் போர்டு அப்படத்தின் தயாரிப்பு நிறுவனத்துக்கு கடிதம் அனுப்பியது.


தற்போது "S Durga" / "Sxxx Durga" மறுதணிக்கைக்காக காத்துதிருக்கும் நிலையில், கேரளா மட்டும் அல்லாமல்லாமல் இந்திய ரசிகர்கள் அனைவரும் எதிர்பார்த்து வருகின்றனர்.