சபரிமலை ஐயப்பன் கோயில் சன்னிதானத்தில் 50 வயதுக்கு கீழ் உள்ள பெண்கள் இருவர் 18 படிகள் ஏறி அதிகாலை 3.45 மணிக்கு தரிசனம் செய்ததாக தகவல் 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

சபரிமலை ஐயப்பன் கோவிலுக்குள் அனைத்து வயது பெண்களையும் அனுமதிக்க வேண்டும் என்று கடந்த செப்டம்பர் மாதம் 28 ஆம் தேதி உச்சநீதிமன்றம் தீர்ப்பு வழங்கியது. தீர்ப்பை எதிர்த்து தேசிய ஐயப்ப பக்தர்கள் சங்கம் உள்ளிட்ட பல்வேறு தரப்பினர் சார்பில் 48 சீராய்வு மனுக்கள் உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டு பின்னர் இந்த மனுக்களை விசாரணைக்கு ஏற்பதாக என்று தலைமை நீதிபதி ரஞ்சன் கோகய் தலைமையிலான அமர்வு முடிவு செய்தது. மேலும் வரும் ஜனவரி மாதம் 22-ஆம் நாள் முதல் சீராய்வு மனுக்கள் மீது விசாரணை நடைபெறும் என்றும் அறிவித்துள்ளனர்.


இதனையடுத்து சபரிமலை செல்வதற்கு ஆண்களும், பெண்களுமாய் ஆன்லைன் மூலம் விண்ணப்பித்து வருகின்றனர். இந்நிலையில், கடந்த வாரம் திருநங்கைகள் 4 பேர் சபரிமலைக்கு தரிசனம் செய்ய முயன்றபோது காவல்துறையினரால் தடுக்கப்பட்டனர். இதன் பின்னர் உயர் நீதிமன்ற குழுவினர் முறையிட்டதையடுத்து, பலத்த பாதுகாப்புடன் திருநங்கைகள் 4 பேரும் மறுநாள் தரிசனம் செய்தனர்.


இதை தொடர்ந்து, கடந்த டிசம்பர் 24 சபரிமலை நோக்கி இரண்டு இளம் பெண்கள் பயணம் மேற்கொண்டனர். அப்பச்சிமேடு பகுதியில் இவர்களை தடுத்து நிறுத்திய ஐயப்ப பக்தர்கள், அவர்கள் கோவிலுக்குள் செல்ல கூடாது என வலியுறுத்தி போராட்டத்தில் ஈடுப்பட்டனர். இதன் காரணமாக அவர்கள் அங்கிருந்து திருப்பி அனுப்பப்பட்டனர். 



இந்நிலையில், சபரிமலை ஐய்யப்பன் கோயிலில் இரண்டு பெண்கள் சாமி தரிசனம் செய்த வீடியோ தற்போது வெளியாகி இருக்கிறது. இன்று காலை 3.45 மணிக்கு அவர்கள் தரிசனம் செய்துள்ளனர். 


அனைத்து வயது பெண்களும் கோயிலுக்கு செல்லலாம் என்று உச்சநீதிமன்ற தீர்ப்புக்கு கடும் எதிர்ப்பு எழுந்த நிலையில் தற்போது இவர்கள் சென்றுள்ளனர். இவர்கள் பம்பையில் இருந்து போலீஸ் பாதுகாப்புடன் சென்றுள்ளனர்.