அமெரிக்கா சுற்றுபயணம் மேற்கொண்டுள்ள பிரதமர் மோடிக்கு அங்குள்ள சீக்கியர்கள், போரா மற்றும் காஷ்மீரி பண்டிட் சமூகத்தினர் உற்சாக வரவேற்பு அளித்தனர்.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

பாரத பிரதமர் நரேந்திர மோடி அரசுமுறைப் பயணமாக அமெரிக்காவில் 7 நாட்கள் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளார். இதற்காக நேற்று முன்தினம் இரவு டெல்லியில் இருந்து புறப்பட்ட அவர் நேற்று அமெரிக்காவின் டெக்சாஸ் மாகாணத்தின் ஹூஸ்டன் நகர் சென்றடைந்தார்.


சுற்றுப்பயணத்தின் முதற் கட்டமாக, ஹூஸ்டனில் நடந்த எரிசக்தி மற்றும் எண்ணெய் நிறுவன தலைவர்கள் கலந்துகொண்ட கூட்டத்தில் பிரதமர் மோடி பேசினார். 


இதனைத்தொடர்ந்து ஹூஸ்டன் நகரில் பிரதமர் மோடியை சீக்கிய சமூகத்தினர் வரவேற்றனர். கர்த்தார்பூர் வழித்தடம் திறப்பதற்கு மத்திய அரசு மேற்கொண்ட முயற்சிகள் உள்ளிட்ட சீக்கிய சமூகத்தினருக்கான பணிகளுக்காக பிரதமர் மோடிக்கு நினைவு பரிசு வழங்கி மகிழ்ந்தனர்.


இதேப்போன்று, போரா சமூக உறுப்பினர்களும் பிரதமர் மோடியை ஹூஸ்டன் நகரில் வரவேற்று சால்வை அணிவித்து மரியாதை செலுத்தி புகைப்படமும் எடுத்து கொண்டனர். தொடர்ந்து அங்குள்ள காஷ்மீரி பண்டிட் சமூகத்தினர் அடங்கிய குழுவினரும் பிரதமர் மோடியை சந்தித்துப் பேசினர். அவர்களில் ஒருவர் பிரதமர் மோடியின் கைகளுக்கு முத்தமிட்டபடி, 7 லட்சம் காஷ்மீரி பண்டிட்டுகளின் சார்பில் எங்களது நன்றியை தெரிவித்து கொள்கிறோம் என தெரிவித்தார்.


டெக்சாஸ் மாநிலத்தில் ஏற்பாடு செய்துள்ள ‘ஹவுடி மோடி’ என்ற சிறப்பு நிகழ்ச்சியில் மோடி இன்று பங்கேற்கிறார். அமெரிக்க அதிபர் டிரம்பும் பங்கேற்கும் இந்த நிகழ்ச்சியில் இந்திய வம்சாவளியை சேர்ந்த 50 ஆயிரம் பேர் பங்கேற்கின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.