இந்தியாவில் பள்ளிகளைச் சுற்றி 50 கிலோ மீட்டர் சுற்றளவுக்கு பீட்சா, பர்கர், நூடுல்ஸ் உள்ளிட்ட துரித உணவுகளை விற்கும் விளம்பரங்களுக்குத் தடை விதிக்க மத்திய அரசு முடிவு செய்துள்ளது. 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

இந்திய உணவு பாதுகாப்பு மற்றும் தர நிர்ணய ஆணையம் (The Food Safety and Standards Authority of India) தரப்பில் இருந்து மத்திய சுகாதாரத்துறை அமைச்சகத்துக்கு ஒரு அறிக்கையுடன் கூடிய பரிந்துரை கடிதம் அனுப்பப்பட்டுள்ளதாக ஆணையத்தின்  தலைமை செயல் அதிகாரி, பவன் குமார் அகர்வால் தெரிவித்துள்ளார். 


கடந்த 2015 ஆம் ஆண்டு மார்ச் மாதம் குழந்தைகள் உடல்நலம் குறித்த பொதுநல வழக்கு ஒன்று டெல்லி உயர்நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. அந்த வழக்கில், குழந்தைகளுக்கு ஆரோக்கியமான உணவு வகைகளை அளிப்பது தொடர்பாக மத்திய அரசு நடவடிக்கைகளை எடுக்க வேண்டும், முக்கியமாக பள்ளிகளில் குழந்தைகளுக்கு கெடுதல் ஏற்படுத்தும் உணவு வகைகளை அளிப்பதை தவிர்க்க வேண்டும் என்று கூறியிருந்தது.


அதன்படி, பள்ளிகளின் அருகில் சிப்ஸ், பீட்சா, பர்கர் உள்ளிட்ட விளம்பரங்களுக்குத் தடை விதிக்க மத்திய அரசு முடிவு செய்துள்ளது. இந்தியாவில் பள்ளிகள் இருக்கும் இடங்களை சுற்றி 50 கிலோ மீட்டர் சுற்றளவுக்கு மேற்குறிப்பிட்ட 'ஜங்க் புட்' விளம்பரங்களுக்கு தடை விதிக்க வேண்டும் என்று உணவு பாதுகாப்பு துறை மற்றும் தர நிர்ணய ஆணையம் மத்திய அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளது. 


மத்திய சுகாதாரத்துறை இதற்கு ஒப்புதல் அளிக்கும் பட்சத்தில் இந்த நடைமுறை விரைவில் அமலுக்கு வரும் என்று எதிர்பார்க்கலாம்.