கேரள மாநிலத்தின் சபரிமலை ஐயப்பன் கோவிலுக்குள் அனைத்து வயது பெண்களையும் அனுமதிக்கலாம் என்ற சுப்ரீம் கோர்ட் வரலாற்று தீர்ப்பினை வழங்கியது. இந்த தீர்ப்பை பலர் ஆதரித்து வந்தாலும், சில இந்து அமைப்புகளும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

இந்த தீர்ப்பை எதிர்த்து கடந்த 15 நாட்களாக கேரளாவில் ஆண்கள் மட்டுமின்றி ஏராளமான பெண்களும் போராட்டம் நடத்தி வந்தார்கள். இந்த தீர்ப்பை மறுஆய்வு செய்யக்கோரி கேரளா, தமிழகம் மற்றும் டெல்லியில் பேரணிகள் நடைபெற்றது. 


இந்நிலையில் ஐப்பசி மாத புஜைக்காக ஐயப்பன் கோவில் நடை நேற்று மாலை திறக்கப்பட்டது. கோயிலில் அனைத்து வயது பெண்களையும் அனுமதிக்க எதிர்ப்பு தெரிவித்து பல்வேறு இடங்களில் போராட்டங்கள் நடைபெற்றன. கோயிலுக்கு வரும் வழியிலேயே பெண் பக்தர்களை போராட்டக்காரர்கள் தடுத்து நிறுத்தினர். பத்திரிக்கையாளர்களை தாக்கினர். இதனால் சபரிமலை செல்லும் வழியில் பாதுகாப்பு வலுப்படுத்தப்பட்டது. 


இதனையடுத்து போராட்டக்காரர்களை போலீசார் விலகி போகும்படி கூறினார். இதனால் இருதரப்பினர் இடையே வாக்குவாதம் ஏற்ப்பட்டது. இதனால் ஆத்திரம் அடைத்த போராட்டக்காரர்கள் அருகில் இருந்த வாகனங்களை அடித்து நொறுக்கினர். பின்னர் போலீசார் போராட்டக்காரர்கள் தடியடி நடத்தினர். அதனை தொடர்ந்து பதற்றம் நிலவுவதால், சபரிமலை பகுதியில் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. 


பம்பை, நிலக்கல், சன்னிதானம், இலவுங்கல் பகுதிகளில் நாளை வரை 144 தடை உத்தரவு நீடிக்கும் என கேரளம் மாநிலம் பத்தினம்திட்டா மாவட்ட ஆட்சியர் நூஹ் கூறியுள்ளார்.


சபரிமலை ஐயப்பன் கோவிலுக்குள் அனைத்து வயது பெண்களையும் அனுமதிக்கலாம் என்ற உச்சநீதிமன்ற தீர்ப்புக்கு எதிராக கேரள அனைத்து பிராமணர் சங்கம் சார்பில் சீராய்வு மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. 


இந்நிலையில், போராட்டக்காரர்களுடன் சமரச பேச்சுவார்த்தை நடத்த தயார் என தேவசம் போர்டு தலைர் பத்மகுமார் கூறி உள்ளார். இதுக்குறித்து அவர் கூறியதாவது, திருவிதாங்கூர் தேவசம் போர்டு எந்த அரசியல் கட்சிகளுக்கும் பின்னால் செல்லவில்லை. சபரிமலை ஐயப்பன் கோவில் விவகாரத்தில் சமரச பேச்சுவார்த்தை நடத்த தயார் எனக்கூறினார்.


மேலும் சபரிமலை விவகாரத்தில் சீராய்வு மனு தாக்கல் செய்தால் போராட்டக்காரர்கள் போராட்டத்தை கைவிட தயாரா? என்றும் கேள்வி எழுப்பியுள்ளார்.