சினிமாவின் தொன்றுதொட்ட காலம் முதல் நடிகர், நடிகைகளே மக்கள் மத்தியில் எப்போதும் பிரபலம் அடைந்து வந்தனர் ; வருகின்றனர். இயக்குநர் என்ற ஒருவர் இருக்கிறார் என்பதே பெரும்பாலான பார்வையாளர்களுக்கு பின்னாளில்தான் தெரியவந்தது. இயக்குநருக்கான அங்கீகாரத்தையும், முக்கியத்துவத்தையும் பொதுமக்களுக்கு உணர்த்திய பெரும்பாலான முயற்சிகளில் இயக்குநர் டி.ராஜேந்திரனின் முயற்சியும், பணியும் மிக முக்கியமானது என சினிமா உலகம் நினைக்கிறது. 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

அப்போதெல்லாம் இயக்குநரின் பெயர் வெள்ளத்திரையில் திரைப்படம் தொடங்குவதற்கு முன்பு வரும் அல்லது திரைப்படம் முடிந்த பிறகு வரும். இந்த வடிவம் எம்.ஜி.ஆர் மற்றும் சிவாஜியின் காலங்களுக்குப் பிறகான சினிமாவில் மாறத் தொடங்கியது. குறிப்பாக, பாலச்சந்தர், பாரதிராஜா, பாலுமகேந்திரா, பாக்யராஜ், ஸ்ரீதர், ருத்ரய்யா உள்ளிட்ட பலர் இயக்குநரின் பங்களிப்பு குறித்து வெகுஜன மக்கள் மத்தியில் கொண்டுசேர்க்கும் முயற்சியில் ஈடுபட்டனர். 


மேலும் படிக்க | ஆரம்பிக்கலாங்களா...ரெண்டே நாளில் 100 கோடி வசூல்- விஸ்வரூபம் எடுத்த ‘விக்ரம்’!


இதில், இயக்குநர் டி.ராஜேந்தரின் ஒரு முயற்சி அன்றைய காலகட்டத்தில் வெகுபிரபலமாக இருந்தது. அதாவது, திரைப்படம் தொடங்கி அதுபாட்டுக்கு ஓடிக்கொண்டிருக்கும். திரைக்கதையின் மிக முக்கியமான கட்டத்தில் முக்கிய கதாபாத்திரம் ஒன்று, அனல் தெறிக்கும் வசனம் பேசிக்கொண்டிருக்கும் போது, இடைவெளியில் சடாரென எல்லாவற்றையும் நிறுத்திவிட்டு உச்சக்கட்ட பின்னணி இசையுடன் ‘கதை, திரைக்கதை, வசனம், இயக்கம் - உங்கள் டி.ராஜேந்தர்’ என்று போடும் வழக்கமுடையவர். இயக்குநர் என்பவர் ஒரு திரைப்படத்துக்கு எவ்வளவு முக்கியம் என்பதை பாமர மக்களும் புரிந்துகொண்டதில் அன்றைய இயக்குநர்களின் இதுபோன்ற முயற்சிகள்தான் காரணமாக இருந்தன. 


அதற்குப் பின்னால் இயக்குநரின் முக்கியத்துவம் உணரப்பட்டது. அவர்களது பெயர்களும் வெகுஜன மக்களால் உச்சரிக்கப்பட்டன. இயக்குநர்களே நடிக்க வந்ததும் ஒருவகையில் காரணமாக அமைந்தன என்றுகூட சொல்லலாம். எத்தனையோ மாஸ் ஹீரோக்களைப் போல, இயக்குநர்களும் வெகுஜன சினிமா ரசிகர்களிடையே பிரபலம் அடைந்தனர். காலமும், காட்சியும் மாறின. இயக்குநர்களின் பேட்டிகள் ஒளிபரப்பப்பட்டன. இயக்குநர்களுக்காகவே படம் பார்க்கும் காலத்தில் வந்துநிற்கிறோம். அதையும் தாண்டி, இப்போது, மாஸ் ஹீரோக்களுக்கு நிகராக இயக்குநருக்கும் பிரம்மாண்ட கட் அவுட் வைக்கும் அளவுக்கு கள்ளக்குறிச்சியில் ஒரு சம்பவம் அரங்கேறியுள்ளது. 


கள்ளக்குறிச்சி மாவட்டம், சங்கராபுரம் பகுதியில் நடிகர் கமலுக்கு இணையாக விக்ரம் படத்தின் இயக்குநர் லோகேஷ் கனகராஜுக்கு பிரம்மாண்டமான கட் அவுட் ஒன்று வைக்கப்பட்டுள்ளது. முன்னணி நடிகர்களுக்கு இணையாக பிரம்மாண்டமான கட் அவுட்டும், மாலையும் போடப்பட்டுள்ளது. தமிழ்ச்சினிமாவுக்கு புதிதாக களமிறங்கிய லோகேஷ் கனராஜ், மாநகரம், கைதி, மாஸ்டர் மற்றும் விக்ரம் என்று வரிசையாக 4 தமிழ்ப்படங்களை அளித்து சாதித்தவர். தற்போது ரிலீஸாகி இருக்கும் விக்ரம் திரைப்படமும் பெரும்பாலும் நல்ல விமர்சனங்களையும், பெரும் வரவேற்பையும் பெற்றிருக்கின்றன. 36 வயதாகும் லோகேஷ் கனகராஜ், பி.எஸ்.ஜி. கல்லூரியில் ஃபேஷன் டெக்னாலஜி படித்து, பின்னர் வங்கியில் பணியாற்றியுள்ளார்.


மேலும் படிக்க | கமல்ஹாசனின் விக்ரம் படத்தை பார்க்க வேண்டிய முக்கிய காரணங்கள்!


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link - https://bit.ly/3hDyh4G


Apple Link - https://apple.co/3loQYeR