நயன்தாரா நடிப்பில் உருவாகியுள்ள கொலையுதிர் காலம் திரைப்படத்திற்கான தடை நீங்கியுள்ள நிலையில் விரைவில் திரைக்கு வரவுள்ளது!


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

சக்ரி டோலட்டி இயக்கத்தில் நயன்தாரா நடித்திருக்கும் திரைப்படம் கொலையுதிர் காலம். இத்திரைப்படம் மர்மம் கலந்த திரில்லர் பாணியில் உருவாகி உள்ளது. ‘ஹஷ்’ என்ற ஹாலிவுட் படத்தை தழுவி உருவாகியுள்ள இத்திரைப்படத்திற்கு தணிக்கையில் யு/ஏ சான்றிதழ் கிடைத்துள்ளது.


எக்ஸ்ட்ரா என்டர்டெயின்மெண்ட் சார்பில் வி.மதியழகன் தயாரித்துள்ள இந்த படத்திற்கு கோரி கெர்யக் ஒளிப்பதிவு செய்துள்ளார். ராமேஸ்வர் எஸ்.பகத் படத்தொகுப்பை கவனிக்கிறார். இப்படம் கடந்த மாதம் 14-ஆம் தேதி வெளியாக இருந்தது.


இதற்கிடையில் கொலையுதிர்காலம் என்ற டைட்டிலுடன் படத்தை வெளியிடக்கூடாது என்று பாலாஜி குமார் உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். வழக்கை விசாரித்த நீதிமன்றம் படத்தை வெளியிட இடைக்கால தடை விதித்திருந்தது.


இந்த தடையை நீக்க கோரி தயாரிப்பாளர் மதியழகன் மனுதாக்கல் செய்தார். இந்த மனு நேற்று விசாரணைக்கு வந்தது. தயாரிப்பு தரப்பு வழக்கறிஞர் கொலையுதிர்காலம் என்ற தலைப்பிற்கு எந்த காப்புரிமையும், யாரிடமும் இல்லை என ஆதாரத்துடன் எடுத்து வைத்து வாதாடினார். இதையடுத்து காப்புரிமை இல்லாத டைட்டிலை யார் வேண்டுமானாலும் பயன்படுத்த உரிமை உண்டு எனக்கூறி படத்துக்கு விதிக்கப்பட்டிருந்த இடைக்கால தடையை நீக்கி நீதிமன்றம் உத்தரவிட்டது. இந்நிலையில் இத்திரைப்படம் விரைவில் திரைக்கு வரவுள்ளது உறுதியாகியுள்ளது.