ரஜினிகாந்த், ஷங்கர் கூட்டணியில் பெரும் பொருட்செலவில் உருவாகி வரும் 2.0 திரைப்படத்தின் வெளியீட்டு தேதி தொடர்ந்து தள்ளிபோகும் நிலையில் தற்போது இப்படம் இந்தாண்டு வெளியாக வாய்ப்பில்லை என தகவல்கள் தெரிவிக்கின்றன.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

ரஜினிகாந்த் மற்றும் ஐஸ்வர்யா ராய் ஜோடியாக நடித்து பெரும் வரவேற்பை பெற்ற தமிழ் திரைப்படம் எந்திரன். இப்படத்தின் வெற்றியை தொடர்ந்து இப்படத்தின் இரண்டாம் பாகம் ‘2.0’ வினை தற்போது ஷங்கர் இயக்கி வருகிறார். '2.0' படத்தின் இறுதிகட்டப் பணிகள் முழுவீச்சில் நடைபெற்று வருகின்றன. 


ஷங்கர் இயக்கத்தில் ரஜினி, ஏமி ஜாக்சன், அக்‌ஷய்குமார், சுதன்ஷு பாண்டே உள்ளிட்ட பலர் நடித்துள்ள '2.0' படத்தை பெரும் பொருட்செலவில் லைகா நிறுவனம் தயாரித்து வருகிறது. நீரவ் ஷா ஒளிப்பதிவு செய்து வரும் படத்துக்கு ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்து வருகிறார். ரூ.450 கோடி செலவில் தமிழ், தெலுங்கு, மலையாளம், இந்தி, ஜப்பான் மொழிகளில் உருவாகி வருகிறது. 


முன்னதாக கடந்த தீபாவளி அன்று இப்படம் வெளியாகும் என அறிவிக்கப்பட்ட நிலையில், பின்னர் ஜனவரி 25 அன்று வெளியாகும் என அறிவிக்கப்பட்டது. இதன்பிறகு ஏப்ரல் 14 அன்று வெளியாகும் என நடிகர் ரஜினிகாந்த் அறிவித்தார். ஆனால் படத்தின் தொழில்நுட்ப பணிகள் முடிவதற்கு காலதாமதம் ஆவதால் வெளியீடு தொடர்ந்து தாமதமாகி வருகிறது.


இந்நிலையில் இந்த வருடம் 2.0 திரைப்படம் வெளியாவதற்கான வாய்ப்பு இல்லை என தகவல்கள் வெளியாகியுள்ளன. இத்திரைப்படத்தின் வெளியீடு குறித்து இந்தாண்டு இறுதிக்குள் தெரிவிக்கப்படும் என படகுழுவினர் அறிவித்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.