பிரபல பின்னணி பாடகி மாளவிகா, தனது பேஸ்புக் பக்கத்தில் ஒரு விரிவான இடுகையில், பாடகர் எஸ்.பி.பாலசுப்பிரமணியனுக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டதற்கு தான் காரணமில்லை என்று  விளக்கம் அளித்துள்ளார்.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

கொரோனா தொற்றுக்காக சிகிச்சை பெற்றுவரும் பாடகர் எஸ்.பி.பாலசுப்பிரமணியத்தின் உடல்நிலை தொடர்ந்து கவலைக்கிடமாக உள்ளது.  அவருக்கு தொடர்ந்து ECMO மற்றும் வெண்டிலேட்டர் உதவியுடன் ஐசியூவில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது என மருத்துவமனை நிர்வாகம் (Hospital Statement) நேற்று புதிய அறிக்கையை வெளியிட்டது. 


 


ALSO READ | இப்படி பாட உங்களால் மட்டும்தானே முடியும்....பிரபல நடிகர் ட்வீட்....


அதேநேரத்தில், பாடகர் எஸ்.பி.பாலசுப்பிரமணியம் (SP Balasubramaniam) விரைவில் நலம் பெற்று வீடு திரும்ப வேண்டும், அவரது ரசிகர்கள் உட்பட திரைத்துறையினர் பலர் வெகுஜன பிரார்த்தனை செய்து வருகின்றனர். அவர் நலம் பெற வேண்டும் என பல அரசியல் தலைவர்கள் ட்வீட் செய்துள்ளனர். 


முன்னதாக கடந்த ஜூலை 30, 31-ஆம் தேதியில் நடைபெற்ற தெலுங்குத் தொலைக்காட்சி நிகழ்ச்சிப் படப்பிடிப்பில் பாடகர் எஸ்.பி.பி. கலந்துகொண்டுள்ளார். எஸ்.பி.பி.யுடன் படப்பிடிப்பில் பங்கேற்ற பாடகி மாளவிகா, கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டார். இதையடுத்து மாளவிகாவினால் தான் எஸ்.பி.பிக்கு வைரஸ் தொற்று ஏற்பட்டது, தனக்கு கொரோனா இருப்பது தெரிந்தும் படப்பிடிப்பில் பங்கேற்றார் என்கிற செய்தி வாட்சப்-களில் பரவியது. இதையடுத்து இந்தச் சர்ச்சை தொடர்பாகப் பாடகி மாளவிகா விளக்கம் அளித்துள்ளார். இது தொடர்பாக தனது ஃபேஸ்புக் பக்கத்தில் கூறியதாவது.,


படப்பிடிப்பின் 2-வது நாளில் பங்கேற்ற நான்கு பாடகிகளில் நானும் ஒருவர். எனக்கு ஒருவேளை கொரோனா பாதிப்பு இருந்திருந்தால் மற்ற மூன்று பாடகிகளுக்கோ அல்லது என்னுடன் ஒப்பனை அறையைப் பகிர்ந்து கொண்ட நிகழ்ச்சி தொகுப்பாளருக்கோ கொரோனா பரப்பியிருப்பேன். கடந்த 5 மாதங்களில் பாதுகாப்புக் காரணங்களுக்காக நானோ என் குடும்பத்தினரோ வீட்டை விட்டு வெளியே செல்லவில்லை. தொலைக்காட்சிப் படப்பிடிப்புக்காகத் தான் முதல்முறையாக வெளியே வந்தேன். எஸ்.பி.பி.யும் சிலரும் கொரோனாவால் பாதிக்கப்பட்டதை அறிந்தவுடன் நான் உடனடியாக கொரோனா பரிசோதனை மேற்கொண்டேன். இந்த முடிவுகள் ஆகஸ்ட் 8 அன்று கிடைத்தது. என் குடும்ப உறுப்பினர்களும் இந்த பரிசோதனையில் பங்கேற்றார்கள். துரதிர்ஷ்டவசமாக என்னுடன் சேர்ந்து என் தந்தை, என் தாய், என் மகள் என அனைவருக்கும் கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. நாங்கள் கடினமான சூழலில் உள்ளோம். எனவே தயவு செய்து எங்களைப் பற்றி வதந்திகளைப் பரப்பாதீர்கள். நான் சைபர் க்ரைமுக்கு புகார் அளித்துள்ளேன், எனவே இந்த போலி செய்தியை பரப்பும் மக்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க முடியும். இந்த கடினமான காலங்களில் எனக்கு உங்கள் ஆதரவும் ஆசீர்வாதங்களும் தேவை.
மிக்க நன்றி
மாளவிகா


 



என்று கூறியுள்ளார்.


 


ALSO READ | SP பாலசுப்ரமணியத்தின் உடல்நிலை தொடர்ந்து கவலைக்கிடம்: மருத்துவமனை அறிக்கை


74 வயதுடைய எஸ்.பி.பாலசுப்பிரமணியம் கடந்த 5 ஆம் தேதி கொரோனா தொற்று (COVID-19) காரணமாக சென்னை சூளைமேட்டில் உள்ள ஒரு தனியார் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார்.  அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.