18 மாத டிஏ அரியர் தொகை வருகிறதா? மத்திய அரசு ஊழியர்களுக்கு ஒரு மாஸ் அப்டேட்

Mon, 01 Jul 2024-11:03 am,

பல்வேறு ஊழியர் சங்கங்கள் கோருவது போல், மத்திய அரசு ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்கள் அகவிலைப்படி (டிஏ) நிலுவைத் தொகையைப் பெறுவார்களா? சமீபத்தில் முடிவடைந்த மக்களவைத் தேர்தலுக்குப் பிறகு நரேந்திர மோடி தலைமையிலான NDA அரசாங்கம் மத்தியில் ஆட்சி அமைத்துள்ளது. இதன் பிறகு கோவிட்-19 தொற்றுநோய் காலத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த அகவிலைப்படி நிலுவைத் தொகையை வழங்குவது தொடர்பான மற்றொரு கோரிக்கையை மத்திய அரசு பெற்றுள்ளது.

கொரோனா பெருந்தொற்றின் போது முடக்கப்பட்ட மூன்று முறைகளுக்கான, அதாவது 18 மாதங்களுக்கான அகவிலைப்படித் தொகையின் அரியர் தொகை பற்றிய சர்ச்சை இப்போது மீண்டும் எழுந்துள்ளது. மத்திய அரசு ஆண்டுக்கு இரு முறை அகவிலைப்படியில் திருத்தம் செய்கிறது, ஆனால், தொற்றுநோய்களின் போது பொருளாதார நெருக்கடிக்கு மத்தியில் நிதி பாதிப்பு காரணமாக மோடி அரசாங்கம் 18 மாதங்களுக்கு டிஏ உயர்வை முடக்கியது.

மத்திய அரசு ஊழியர்களுக்கான கூட்டு ஆலோசனை அமைப்புகள் தேசிய கவுன்சில் (ஊழியர்கள் தரப்பு) செயலாளர் சிவ கோபால் மிஸ்ராவிடமிருந்து சமீபத்திய கோரிக்கை பிரதமரிடம் வந்துள்ளது. மிஸ்ரா மோடிக்கு எழுதிய கடிதத்தில், 18 மாத டிஏ நிலுவைத் தொகை உள்ளிட்ட 14 நீண்ட கால கோரிக்கைகளை வலியுறுத்தியுள்ளார். தேசிய கவுன்சிலின் (ஜேசிஎம்) செயலாளர் என்ற முறையில், மத்திய அரசு ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்களின் மனதைக் கிளர்ச்சியடையச் செய்யும் சில முக்கியப் பிரச்சினைகளுக்கு உங்கள் கவனத்தை ஈர்ப்பது எனது கடமை” என்று அவர் பிரதமருக்கு எழுதியுள்ளார்.

“COVID-19 தொற்றுநோய்களின் போது முடக்கப்பட்ட 18 மாத டிஏ நிலுவைத் தொகையை மத்திய அரசு ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்களுக்கு விடுவிக்க வேண்டும்” என்று அந்தக் கடிதத்தில் அரசாங்கத்திடம் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. 

நிதி நிலைத்தன்மையைக் காரணம் காட்டி, கடந்த ஓரிரு முறை ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்களுக்கு டிஏ நிலுவைத் தொகையை (DA Arreas amount) வழங்குவதற்கான வாய்ப்பை அரசாங்கம் நிராகரித்த போதிலும் இந்த கோரிக்கை எழுப்பப்பட்டுள்ளது.

ஜனவரி 2020 முதல் ஜூன் 2021 வரை நிலுவையில் உள்ள டிஏ நிலுவைத் தொகை (DA Arrears) குறித்த பரிந்துரையை இந்த ஆண்டு ஜனவரியில், நிதி அமைச்சகம் பெற்றது. பாரதிய பிரதிக்ஷா மஸ்தூர் சங்கத்தின் பொதுச் செயலாளர் முகேஷ் சிங், அரசுக்கு கடிதம் எழுதி, இதைக் குறித்து கவனத்தை ஈர்த்தார். 

கடந்த ஆண்டு மோடி 2.0 ஆட்சிக் காலத்தில், அப்போதைய மத்திய நிதியமைச்சர் பங்கஜ் சவுத்ரி மக்களவையில், “... 2020-21ஆம் ஆண்டின் சவாலான நிதியாண்டுடன் தொடர்புடைய டிஏ/டிஆர் நிலுவைத் தொகையானது சாத்தியமானதாகக் கருதப்படவில்லை. 2020 ஆம் ஆண்டில் தொற்றுநோயின் எதிர்மறையான நிதி தாக்கம் மற்றும் 2020-21 நிதியாண்டுக்கு அப்பால் அரசாங்கம் சந்தித்த நிதிக் கசிவு ஆகியவை இங்கு கருத்தில் கொள்ளப்படிகின்றன” என்று கூறினார்.

மக்களவையில் ஒரு கேள்விக்கு பதிலளித்த சவுத்ரி, ஜனவரி 2020 முதல் ஜூன் 2021 வரை மத்திய அரசு ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்களுக்கு மூன்று தவணை டிஏவை முடக்கும் முடிவு கோவிட்-19 இன் பின்னணியில் எடுக்கப்பட்டதாகவும், கொரோனா தொற்றால் ஏற்பட்ட பொருளாதார சீர்குலைவை சரி செய்ய இது உதவியதாகவும் கூறினார். 

இது வரை அகவிலைப்படி அரியர் தொகையை அளிப்பது பற்றி அரசாங்கத்திடமிருந்து எந்த வித அதிகாரப்பூர்வ அறிவிப்பும் அளிக்கப்படவில்லை. எனினும், தற்போது புதிய ஆட்சி அமைந்துள்ளது. தொழிலாளர் சங்கம் சார்பில் மீண்டும் மத்திய அரசு ஊழியர்களின் நிலைமையை விளக்கி மீண்டும் கடிதம் அளிக்கப்பட்டுள்ளது. ஆகையால் தற்போது டிஏ அரியர் பற்றிய நம்பிக்கை மீண்டும் அதிகரித்துள்ளது.

பொறுப்பு துறப்பு: இந்த பதிவு தகவல் நோக்கங்களுக்காக மட்டுமே எழுதப்பட்டுள்ளது. இதன் மூலம் அகவிலைப்படி அரியர் தொகைக்கான எந்தவித உத்தரவாதமும் அளிக்கப்படவில்லை. சமீபத்திய மற்றும் துல்லியமான தகவல்களுக்கு அதிகாரப்பூர்வ அரசாங்க தளங்களை அணுக பரிந்துரைக்கபப்டுகின்றது.   

ZEENEWS TRENDING STORIES

By continuing to use the site, you agree to the use of cookies. You can find out more by Tapping this link