மத்திய அரசு ஊழியர்களுக்கு மகிழ்ச்சியான அப்டேட்: டிஏ ஹைக் எப்போது? எவ்வளவு?.. முழு விவரம் இதோ

Wed, 24 Jul 2024-5:39 pm,

மத்திய அரசு ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்களுக்கு நேற்று தாக்கல் செய்யப்பட்ட பட்ஜெட்டில் எந்த நிவாரணமும் கிடைக்கவில்லை. மத்திய அரசு 8வது ஊதியக் குழுவை அமைப்பது பற்றி பட்ஜெட்டில் அறிவிக்கக்கூடும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் அது நடக்கவில்லை. நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் பட்ஜெட் உரையைத் தொடங்கியது முதல் மிகுந்த கவனத்துடன் கேட்டுக்கொண்டு இருந்த மத்திய அரசு ஊழியர்களுக்கு ஏமாற்றமே மிஞ்சியது. 

இதனால், மத்திய அரசு ஊழியர்கள் பெரும் குழப்பத்துக்கு ஆளாகியுள்ளனர். எனினும், அவர்கள் ஏமாற்றம் அடையத் தேவையில்லை. இன்னும் சில நாட்களில் மத்திய அரசு ஊழியர்களுக்கும் ஓய்வூதியதாரர்களுக்கும் புதிய பரிசு கிடைக்க வாய்ப்புள்ளது. அதை பற்றி இந்த பதிவில் காணலாம்.

இன்னும் சில நாட்களில் மத்திய அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படி உயர்வு பற்றிய அறிவிப்பு வரக்கூடும். இதற்காக மத்திய அரசு ஊழியர்கள் நீண்ட நாட்களாக காத்திருக்கிறார்கள். டிஏ உயர்வு அறிவிப்பு அவர்களுக்கு ஒரு பெரிய பரிசாக இருக்கும். அகவிலைப்படி 4% அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

அகவிலைப்படி அதிகரிக்கப்பட்டால், அதனால், சுமார் ஒரு கோடி குடும்பங்கள் பயன்பெறும். இதில் மத்திய அரசு ஊழியர்களும் ஓய்வூதியதாரர்களும் அடங்குவர். ஜூலை கடைசி தேதிக்குள் இதை அரசு அறிவிக்கலாம் என வட்டாரங்கள் தெரிவிக்கின்றனர். இன்னும் அதிகாரப்பூர்வமாக எதுவும் கூறப்படவில்லை என்றாலும், ஊடகங்களில் இதுபோன்ற கூற்றுக்கள் வருகின்றன. 

இந்த முறை அகவிலைப்படி 4% அதிகரிக்கும் என கூறப்படுகின்றது. இது நடந்தால் மத்திய அரசு ஊழியர்களின் மொத்த அகவிலைப்படியும் ஓய்வூதியதாரர்களின் அகவிலை நிவாரணமும் 54% ஆக உயரும். தற்போது, மத்திய ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்கள் முறையே 50 சதவீத அகவிலைப்படி மற்றும் அகவிலை நிவாரணத்தை பெற்று வருகிறார்கள். அகவிலைப்படி அதிகரிப்பு ஜூலை 1 முதல் அமலுக்கு வரும். 

ஒரு உதாரணத்தின் மூலம் இதை புரிந்துகொள்ளலாம். ஒரு ஊழியரின் சம்பளம் ரூ.40,000 எனில், 4 சதவீத அகவிலைப்படியின்படி, மொத்த சம்பளத்தில் மாதத்திற்கு சுமார் ரூ.1,600 அதிகரிக்கும். இதன்படி, ஒரு ஆண்டுக்கான அதிகரிப்பு ரூ.19200 ஆக இருக்கும். பணவீக்கம் மற்றும் விலைவாசியால் பாதிக்கப்பட்டுள்ள ஊழியர்களுக்கு இது பெரும் நிவாரணத்தை அளிக்கும். 

பொதுவாக ஆண்டுக்கு 2 முறை அகவிலைப்படி அதிகரிக்கப்படுகின்றது. ஜனவரி மற்றும் ஜூலை மாதங்களில் இவை அமலுக்கு வருகின்றன. தொழிலாளர் அமைச்சகம் வெளியிடும் ஏஐசிபிஐ குறியீட்டு (AICPI Index) எண்களின் அடிப்படையில் டிஏ ஹைக் தீர்மானிக்கப்படுகின்றது. 

8வது ஊதியக் குழு அமைப்பது குறித்து மோடி அரசு இந்த பட்ஜெட்டில் ஏதாவது அப்டேட் அளிக்கும் என்று மத்திய, மாநில ஊழியர்கள் நீண்ட நாட்களாக எதிர்பார்த்து வந்தனர். பல மணி நேரம் நீடித்த பட்ஜெட் உரையில் நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் இதை பற்றி எதுவும் கூறவில்லை. இது பெரும் ஏமாற்றமாக உள்ள அதே வேளையில் ஊழியர் சங்கங்கள் இதற்கான கோரிக்கையை மீண்டும் அரசின் முன் வைக்க வாய்ப்புள்ளதாக கூறப்படுகின்றது.

பொறுப்பு துறப்பு: இந்த பதிவு தகவல் நோக்கங்களுக்காக மட்டுமே எழுதப்பட்டுள்ளது. இதன் மூலம் அகவிலைப்படி உயர்வுக்கான எந்தவித உத்தரவாதமும் அளிக்கப்படவில்லை. சமீபத்திய மற்றும் துல்லியமான தகவல்களுக்கு அதிகாரப்பூர்வ அரசாங்க தளங்களை அணுக பரிந்துரைக்கபப்டுகின்றது.

 

ZEENEWS TRENDING STORIES

By continuing to use the site, you agree to the use of cookies. You can find out more by Tapping this link