கஜா புயல் பாதித்த பகுதிகளை பார்வையிட மத்திய குழு இன்று (வெள்ளிக்கிழமை) தமிழகம் வருகிறது. இந்த குழுவினர் 3 நாட்கள் ஆய்வு செய்யவுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

கடந்த நவம்பர் 15-ஆம் தேதி தமிழகத்தை தாக்கிய கஜா புயல் தமிழகத்தின் திருவாரூர், தஞ்சை, நாகை, கடலூர், புதுக்கோட்டை ஆகிய மாவட்டங்களை மிக மோசமாக சிதைத்துள்ளது. கஜா புயலில் சிக்கி 45 பேர் பலியாகியுள்ளதாக தமிழக அரசு அறிவித்துள்ளது. இந்த கோர தாண்டவத்தில் சுமார் 1,70,000 மரங்கள், 1,17,000-க்கும் அதிகமான வீடுகள் சேதமாகியுள்ளதுவும் தமிழக அரசு குறிப்பிட்டுள்ளது. உடனடி நிவாரண பணிகளுக்காக தமிழக அரசு ரூ.1000 கோடி ஒதுக்கியுள்ளது. புயல் கரையை கடந்த பின்னர் நிவாரணப் பணிகள் மும்மரமாக நடைபெற்று வருகின்றன.  எனினும் சில பகுதிகளில் போதுமான வசதிகள் இன்னும் வந்த சேரவில்லை என மக்கள் போராட்டத்தில் ஈடுப்பட்டு வருகின்றனர். 


முன்னதாக புயலால் அதிகம் சேதமடைந்த டெல்டா மாவட்டங்களை முதல்வர் எடப்பாடி பழனிசாமி சமீபத்தில் பார்வையிட்டார். கஜா புயலால் ஏற்பட்ட பாதிப்புகள் குறித்தும், சேதமதிப்பு பற்றிய விவரங்களையும் பிரதமரிடம் தெரிவித்து மீட்பு மற்றும் நிவாரண பணிகளுக்கு தேவையான நிதி உதவியை பெறுவதற்காக முதல்வர் எடப்பாடி பழனிசாமி நேற்று முன்தினம் டெல்லி பயணம் மேற்கொண்டார்.


பிரதமர் மோடியை சந்தித்து பேசிய அவல், புயலால் ஏற்பட்ட பாதிப்புகள் குறித்து பிரதமரிடம் விளக்கினார். சீரமைப்பு பணிகளை மேற்கொள்ள ரூ.15 ஆயிரம் கோடி நிவாரண நிதி கேட்டு பிரதமரிடம் கோரிக்கை மனு ஒன்றினையும் அளித்துள்ளார். மேலும் புயலால் பாதிக்கப்பட்ட பகுதிகளை பார்வையிட மத்திய குழுவை தமிழகத்துக்கு அனுப்பி வைக்குமாறு பிரதமரிடம் அவர் கேட்டுக்கொண்டார். 


முதல்வரி கோரிக்கையினை ஏற்றுக்கொண்ட மத்திய அரசு தமிழகத்திற்கு மத்தியகுழு அனுப்பிவைக்க ஒப்புக்கொண்டது. அதன்படி மத்தியகுழு இன்று மாலை சென்னை வர இருக்கிறது. 


இன்று சென்னை வரும் மத்திய குழுவினர், முதலில் அமைச்சர்களுடன் கலந்து பேசி, எந்தெந்த இடங்களுக்கு செல்வது என்பது பற்றி முடிவு செய்கின்றது. இந்த குழு பாதிக்கப்பட்ட பகுதிகளை 3 நாட்கள் பார்வையிடுவார்கள் என்றும், பின்னர் டெல்லி சென்று மத்திய அரசிடம் அறிக்கை தாக்கல் செய்வார்கள் என்றும் தகல்கள் தெரிவிக்கின்றன.


5 பேர் கொண்ட மத்திய குழுவிற்கு உள்துறை அமைச்சகத்தின் நீதித்துறை இணைச் செயலாளர் டேனியல் ரிச்சர்டு தலைமை தாங்குகிறார். விமானம் மூலம் இன்று மாலை 5.30 மணிக்கு சென்னை வந்து சேரும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.