மறைந்த முதல்-அமைச்சர் ஜெயலலிதாவின் மறைவுக்கு பிறகு அவரது அண்ணன் மகள் தீபா அரசியலுக்கு வரவேண்டும் என்று அ.தி.மு.க.வில் ஒரு பிரிவினர் வலியுறுத்தி வந்தனர்.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

தி.நகர் சிவஞானம் தெருவில் உள்ள தீபாவின் வீட்டு முன்பு தினமும் அ.தி.மு.க. தொண்டர்கள் திரண்டு வருகிறார்கள். வெளி மாவட்டங்களில் இருந்தும் அ.தி.மு.க.வினர் தீபாவை பார்ப்பதற்காக சென்னையில் குவிந்த வண்ணம் உள்ளனர். அ.தி.மு.க. முன்னாள் எம்.எல்.ஏ.க்கள் பலரும் தீபாவுக்கு ஆதரவு தெரிவித்துள்ளனர். தொண்டர்களின் விருப்பத்தை ஏற்று தீபா அரசியல் களத்தில் குதித்தார். எம்.ஜி.ஆர். பிறந்த நாளான ஜனவரி 17-ம் தேதி அன்று இது தொடர்பான அறிவிப்பை தீபா வெளியிட்டார்.


மக்களுக்கு நல்லது செய்ய ஆசைப்படுகிறேன். எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா காட்டிய வழியில் எனது அரசியல் பயணம் இருக்கும் என்று தெரிவித்த தீபா, தமிழகம் முழுவதும் சுற்றுப்பயணம் செய்ய இருப்பதாகவும் கூறினார். அப்போது மக்களிடம் கருத்துக்களை கேட்டு அதற்கேற்ப செயல்பட உள்ளதாகவும், எனது அரசியல் பயணத்தை யாராலும் தடுக்க முடியாது என்றும் அவர் கூறினார்.


இந்நிலையில் அண்ணா நினைவு நாளான நேற்று மெரினாவில் உள்ள அண்ணா நினைவிடத்தில் அஞ்சலி செலுத்திய தீபா, ஆர்.கே.நகர் தொகுதிக்கு சென்று மக்களை சந்தித்தார். அங்குள்ள ஆதரவற்றோர் இல்லத்துக்கு சென்ற தீபா, குழந்தைகள் மற்றும் முதியோர்களை சந்தித்து பேசினார். அப்போது அவர்களுக்கு தேவையான நலத்திட்ட உதவிகளை வழங்கினார். ஆர்.கே.நகர் தொகுதியில் போட்டியிடுவது குறித்து விரைவில் முடிவை அறிவிப்பேன் என்றும், ஜெயலலிதா விட்டுச் சென்ற இடத்தை நிரப்புவேன் என்றும் அதிரடியாக அறிவித்தார். அவரது இந்த அறிவிப்பு முக்கியத்துவம் வாய்ந்ததாகவே பார்க்கப்படுகிறது.


ஜெயலலிதா பிறந்த நாளான பிப்ரவரி 24-ந்தேதி முக்கிய அறிவிப்பை வெளியிடுவேன் என்று தீபா கூறி இருந்தார். அதற்கான தொடக்கமாகவே தீபா ஆர்.கே.நகர் தொகுதியில் களம் இறங்கி இருப்பதாக அவரது ஆதரவாளர்கள் கூறினர்.ஜெயலலிதாவின் பிறந்த நாளுக்கு இன்னும் 20 நாட்களே இருக்கும் நிலையில், தீபா தொடங்கி இருக்கும் அதிரடி அரசியல் பயணம் மிகுந்த எதிர் பார்ப்பை ஏற்படுத்தி உள்ளது.