டெல்லி: கடந்த 12 ஆம் தேதி கரூர் மாவட்டம் அரவக்குறிச்சி தொகுதியில் போட்டியிடும் மக்கள் நீதி மய்யம் கட்சி வேட்பாளர் மோகன்ராஜை ஆதரித்து அக்கட்சியின் தலைவர் கமல்ஹாசன் பிரசாரம் செய்தார். பிரச்சாரத்தின் போது., "முஸ்லிம்கள் நிறைய இருக்கும் பகுதி என்பதால் இதனை சொல்லவில்லை. காந்தி சிலைக்கு முன்னாள் சொன்னேன். சுதந்திர இந்தியாவின் முதல் தீவிரவாதி ஒரு இந்து. அவர் பெயர் நாத்ராம் கோட்சே. நான் காந்தியின் மானசீக கொள்ளுபேரன். அந்த கொலைக்கு கேள்வி கேட்க வந்திருக்கிறேன்" எனப் பிரச்சாரம் செய்தார்.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

இதைத்தொடர்ந்து கமலின் இந்த கருத்திற்கு பாஜக மற்றும் இந்து அமைப்பு தரப்பில் இருந்து கடும் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் சில அரசியல் தலைவர்கள் கண்டனமும், சில அரசியல் தலைவர்கள் ஆதரவும் தெரிவித்து வருகின்றனர்.


நேற்று மக்கள் நீதி மய்யத்தின் தலைவர் கமல்ஹாசனுக்கு எதிராக அரவக்குறிச்சி காவல் நிலையத்தில் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. மத கலவரத்தை தூண்டும் வகையில் பேசியதாக குற்றவியல் சட்ட 153ஏ பிரிவின் கீழும், பொது இடத்தில் பிரச்சனையை உருவாக்கியதாக 295ஏ பிரிவின் கீழும் வழக்குப்பதிவு செய்யப்பட்டது.


இந்தநிலையில், இன்று டெல்லி உயர்நீதிமன்றத்தில் பாஜகவை சேர்ந்த அஸ்வினி உபாத்யாயா, மக்கள் நீதி மய்யத்தின் தலைவர் கமல்ஹாசனுக்கு எதிராக வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கை விசாரித்த நீதிபதி சிஸ்தனி அமர்வு, நீங்கள் போட்ட வழக்கு தொடர்பான சம்பவம் தமிழ்நாட்டில் நடந்துள்ளது. நீங்கள் ஏன்? டெல்லியில் உயர்நீதிமன்றத்தில் வழக்கு போட்டீர்கள். எந்தவித பிரச்சனையாக இருந்தாலும் நீங்கள் சென்னை உயர்நீதிமன்றத்தை அணுக வேண்டியதுதானே? என கேள்வி எழுப்பிய நீதிபதிகள் கமல்ஹாசனுக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட வழக்கை தள்ளுபடி செய்தனர்.