இன்னும் 15 தினங்களில் உள்ளாட்சித் தேர்தல் குறித்த அறிவிப்புகள் வெளியாகும் என தமிழக துணை முதலவர் ஓ.பன்னீர்செல்வம் தெரிவிப்பு..!


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

சென்னை: இன்னும் 15 நாட்களில் உள்ளாட்சித் தேர்தல் அறிவிப்பு வெளியாக உள்ளது என்று, நாங்குநேரி தொகுதியில் அதிமுக நன்றி அறிவிப்பு கூட்டத்தில் பேசியபோது துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார்.


விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டி, நெல்லை மாவட்டம் நாங்குநேரி, புதுச்சேரியில் காமராஜ்நகர் ஆகிய தொகுதிகளுக்கு கடந்த 21 ஆம் தேதி இடைத்தேர்தல் நடைபெற்றது. கடந்த 24 ஆம் தேதி தேர்தல் முடிவுகள் வெளியானது. விக்கிரவாண்டி, நாங்குநேரி இரண்டு தொகுதிகளிலும் அதிமுக அமோக வெற்றி பெற்றது. நாங்குநேரி இடைத்தேர்தலில் அதிமுக அமோக வெற்றி பெற்றதற்கு நன்றி அறிவிப்பு கூட்டம் நேற்று நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில், தமிழக துணை முதல்வர் பன்னீர்செல்வம் கலந்து கொண்டார். 


இந்நிகழ்ச்சியில் அவர் பேசுகையில்; மாபெரும் வெற்றியை தந்த நாங்குநேரி மக்களுக்கு எவ்வளவு நன்றி சொன்னாலும் தீராது. பல நல்ல திட்டங்களை மக்களுக்கு கொடுக்க உள்ளதாகவும், அதன் மூலம் தான் நன்றி தெரிவிக்க முடியும் என்றும் கூறினார். இன்னும் 15 நாள்களில் உள்ளாட்சி தேர்தல் அறிவிப்பு வரும் என்றும், அதில் அதிமுக அமோக வெற்றி பெறும் என்றும் துணை முதலமைச்சர் தெரிவித்தார்.


இதை தொடர்ந்து உரையாற்றிய மின்சாரத்துறை அமைச்சர் தங்கமணி இந்தியாவே திரும்பி பார்க்க கூடிய அளவிற்கு மாபெரும் வெற்றியை நாங்குநேரி மக்கள் தேடி தந்துள்ளதாக கூறினார்.கூட்டத்தில் அமைச்சர்கள் தங்கமணி, கடம்பூ ராஜூ, ராஜேந்திரபாலாஜி, திண்டுக்கல் சீனிவாசன், ராஜலட்சுமி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.