திமுக துணைப் பொதுச்செயலாளர்களாக பொன்முடி, ஆ.ராசா ஆகியோர் நியமனம்!!


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

திமுக பொதுக்குழு கூட்டம் அக்கட்சி தலைவர் ஸ்டாலின் தலைமையில் இன்று காலை 10 மணிக்கு தொடங்கியது. முதன்முறையாக காணொலி மூலம் நடைபெறும் இக்கூட்டத்தில், திமுக பொதுச்செயலாளராக துரைமுருகன், பொருளாளராக டி.ஆர்.பாலு ஆகியோர் பதவியேற்றனர். 


இந்த கூட்டத்தில், தமிழகம் முழுவதும் 67 இடங்களில் இருந்து சுமார் 3,500 பொதுக்குழு உறுப்பினர்கள் பங்கேற்றுள்ளனர். சென்னையில் உள்ள அண்ணா அறிவாலயத்தில் துரைமுருகன், டி.ஆர்.பாலு உள்பட 70- க்கும் மேற்பட்டோர் பங்கேற்றுள்ளனர். இந்நிலையில், திமுக பொதுச்செயலாளராக துரைமுருகனும், திமுக பொருளாளராக டி.ஆர்.பாலுவும் ஒருமனதாக தேர்ந்தெடுக்கப்பட்டனர். திமுக பொதுச்செயலாளர், பொருளாளராக போட்டியின்றி தேர்வு செய்யப்பட்ட துரைமுருகன், டி.ஆர்.பாலுவிற்கு கட்சியின் தலைவர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்தார். 



திமுகவின் 4 வது பொதுச்செயலாளராக துரைமுருகன் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். 8 வது பொருளாளராக டி.ஆர்.பாலு தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். திமுக பொதுச்செயலாளருக்கான அதிகாரத்தை மீண்டும் பொதுச்செயலாளரிடமே ஒப்படைக்க சட்டத்திருத்தம் கொண்டு வரப்பட்டது.


மேலும், ஆ.ராசா மற்றும் பொன்முடி ஆகியோர் திமுக சட்ட ப்பிரிவு விதி 17 (3) ன் படி துணைப்பொதுச் செயலாளர்களாக தேர்ந்தெடுக்கப்படுவதாக அறிவித்தார். இதன் மூலம் திமுகவின் துணை பொதுச் செயலாளரின் எண்ணிக்கை 3-லிருந்து 5 ஆக உயர்ந்தது. முன்னதாக சுப்புலட்சுமி ஜெகதீசன், ஐ.பெரியசாமி, அத்தியூர் செல்வராஜ் ஆகியோர் அப்பொறுப்பில் உள்ளது குறிப்பிடத்தக்கது.