தமிழகத்தில் பொதுத்தேர்வுகள் நடைப்பெற்று வரும் நிலையில், தேர்வின் போது சோதனைக்கு வரும் பறக்கும் படையினர் மாணவியரை தொட்டு ஆடைகளை சோதனை செய்யக்கூடாது என தடை விதிக்கப்பட்டுள்ளது!


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

தமிழகத்தில், தற்போது பிளஸ் 2 மற்றும் பிளஸ் 1 பொதுத் தேர்வுகள் நடைப்பெற்று வருகின்றன. தேர்வில் முறைகேடுகளை தடுக்க, சுமார் 4,000 பறக்கும் படைகள் அமைக்கப்பட்டுள்ளன. 


மாநிலம் முழுவதும் அமைக்கப் பட்டுள்ள 2,950 தேர்வு மையங்களில், மூன்று லட்சத்துக்கும் மேற்பட்ட ஆசிரியர்களுக்கு, தேர்வறை கண்காணிப்பாளர் உள்ளிட்ட, பொறுப்புகள் வழங்கப்பட்டு உள்ளன. மேலும், மாவட்ட வாரியாக, இயக்குனர் மற்றும் இணை இயக்குனர்கள் என, 23 உயர் அதிகாரிகள் அடங்கிய, உயர்நிலை பறக்கும் படைகளும் அமைக்கப்பட்டுள்ளன.


இந்நிலையில், தேர்வறைகளில் மாணவர்கள் தங்கள் ஆடைகளில், துண்டு சீட்டுகளை மறைத்து வைத்து, காப்பியடிக்க முயற்சிக்கின்றனரா இல்லையா என, பறக்கும் படையினரும், தேர்வு கண்காணிப்பாளர்களும் சோதனை செய்கின்றனர்.


இதேப்போல் மாணவியர் மட்டுமே உள்ள தேர்வு மையங்களில், பறக்கும் படையில் உள்ள, பெண் ஆசிரியர், மாணவியர், துண்டு சீட்டு வைத்துள்ளனரா என, ஆடைகளை சோதனை செய்வதாக, உயர் அதிகாரிகளுக்கு தகவல்கள் வந்துள்ளன. இந்த சோதனைகளால், பல மாணவியர் மனரீதியாக பாதிக்கப்படுவதாகவும், அவமானமாக கருதுவதாகவும் கூறப்படுகிறது. 


எனவே, 'மாணவியர் உடலை தொட்டு, ஆடையை சோதனை செய்ய வேண்டாம். அவர்கள் காப்பி அடித்தால், ஆதாரத்துடன் சிக்க வைக்கலாம். மாறாக, சந்தேகத்துடன் அவர்களை சோதிக்க வேண்டாம்' என, அதிகாரிகளுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.