நோய் பரவலை தடுக்க தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன என முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்!!


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

கொரோனா வைரஸ் பாதிப்பு தடுப்பு நடவடிக்கைகள் குறித்தும் அமைச்சர்கள், அதிகாரிகளுடன் முதல்வர் எடப்பாடி பழனிசாமி இன்று ஆலோசனை நடத்தினார். இதையடுத்து செய்தியாளர்களிடம் அவர் கூறுகையில்..... ‘கொரோனா தடுப்பு நடவடிக்கை தொடர்பாக 14 முறை ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றுள்ளது. 10 குழுக்கள் அமைத்து தீவிர நடவடிக்கை எடுக்கப்பட்டுவருகிறது. சென்னையில் மண்டலவாரியாக கொரோனா தடுப்பு பணிகள் முடுக்கிவிடப்பட்டுள்ளன. கொரோனா பரவலைத் தடுக்க 3 IAS அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளன. 


மூன்று அதிகாரிகளுக்கு உதவுவதற்கு 10 குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன. மற்ற மாநிலங்களைக் காட்டிலும் தமிழகத்தில் கொரோனா பரவலைத்தடுக்க கடும் நடவடிக்கை எடுக்கப்பட்டுவருகிறது. அனைத்து மாவட்ட ஆட்சியர்களுடனும் நான்கு முறை ஆலோசனை நடத்தியுள்ளேன். மத்திய அரசின் ஆலோசனையின்படி கொரோனா பரவலைத் தடுக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுவருகிறது. 


சென்னை கூட்ட நெரிசல் அதிகம் உள்ள பகுதியாக இருப்பதால் இங்கு கொரோனா பரவுதல் வேகம் அதிகமாக உள்ளது. தடை செய்யப்பட்ட பகுதிகளில் நேரடியாக காய்கறிகள் கொண்டு சேர்க்கப்பட்டுவருகிறது. சென்னையில் மட்டும் 4,000 படுக்கைகள் வசதிகள் கொண்ட மருத்துவமனைகள் தயார் நிலையில் உள்ளது. நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிப்பதற்காக உரிய மருந்துகள் அளிக்கப்படுகிறது. 


கபசுர குடிநீர் வழங்கப்படுகிறது. 50 பரிசோதனை மையங்கள் மூலம் நாளொன்றுக்கு 12,000 பேருக்கு சோதனைகள் மேற்கொள்ளப்படுகின்றன. மத்திய அரசு வழிகாட்டுதலின்படி சில தொழில்கள் தொடங்குவதற்கு கட்டுப்பாடுகள் தளர்வு செய்யப்பட்டுள்ளன. தமிழகத்தின் தடுப்பு நடவடிக்கைகளை மத்திய குழு பாராட்டியுள்ளது. சென்னையில் நடமாடும் பரிசோதனை வாகனம் மக்கள் இருக்கும் இடத்துக்கே செல்கிறது. 


பிற மாநிலத் தொழிலாளர்கள் தங்கியிருக்கும் விவரம் அரசிடம் உள்ளது. நீங்கள் தங்கியிருக்கும் இடத்திலேயே இருக்கவேண்டும். ரயில்களின் நிலையைப் பொறுத்து நீங்கள் இருக்கும் இடத்துக்கே உங்களுக்கு அறிவிப்பு வழங்கப்படும். வெளியே செல்பவர்கள் கண்டிப்பாக முகக் கவசங்களை அணியவேண்டும். கைகளை அடிக்கடி கழுவ வேண்டும். பொருள்களை வாங்கும்போது சமூக இடைவெளியைக் கடைபிடிக்க வேண்டும்.. அம்மா உணவகங்களில் நாள் ஒன்றுக்கு 7 லட்சம் பேருக்கு உணவு அளிக்கப்படுகிறது. தமிழகத்தில் எவரும் பட்டினி இல்லை என்ற நிலையை எங்கள் அரசு உருவாக்கியுள்ளது. 


மக்களுக்கு ரேஷன் கடைகள் மூலமாக இலவசமாக அரிசி, எண்ணெய், சர்க்கரை உள்ளிட்ட பொருள்கள் வழங்கப்பட்டுள்ளன. அது மே மாதமும் ஜூன் மாதமும் ரேஷன் பொருள்கள் இலவசமாக வழங்கப்படும். அரசு அறிவிக்கும் வழிமுறைகளைப் பின்பற்ற வேண்டும் என்று கைகளைக் கூப்பிக் கேட்டுக் கொள்கிறேன். சமூக இடைவெளியை பின்பற்றி பொருள்களை வாங்கினால் கொரோனா தொற்றைத் தடுக்க முடியும். கண்ணை இமை காப்பதைப் போல் மக்களை அரசு காத்து வருகிறது ’ என்று தெரிவித்தார்.