சபரிமலை ஐயப்பன் கோயிலுக்கு சென்ற, சென்னையைச் சேர்ந்த 50 வயதுக்குட்பட்ட பெண்கள் 11 பேர் கொண்ட குழு இன்று அதிகாலை பம்பையில் தடுத்து நிறுத்தப்பட்டனர்!


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

இதன் காரணமாக பம்பையில் பதற்றமான சூழல் உருவாகியுள்ளது. இந்நிலையில் தங்களை மலையில் அனுமதிக்காக நிர்வாகத்தினை கண்டித்து தடுத்து நிறுத்தப்பட்ட பெண்கள் "ஐயப்ப நாமஜெபத்தை" என கோஷமிட்டு எதிர்ப்புகளை தெரிவித்து வருகின்றனர்.



சபரிமலை ஐயப்பன் கோவிலுக்குள் அனைத்து வயது பெண்களையும் அனுமதிக்க வேண்டும் என்று கடந்த செப்டம்பர் மாதம் 28 ஆம் தேதி உச்சநீதிமன்றம் தீர்ப்பு வழங்கியது. தீர்ப்பை எதிர்த்து தேசிய ஐயப்ப பக்தர்கள் சங்கம் உள்ளிட்ட பல்வேறு தரப்பினர் சார்பில் 48 சீராய்வு மனுக்கள் உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டு பின்னர் இந்த மனுக்களை விசாரணைக்கு ஏற்பதாக என்று தலைமை நீதிபதி ரஞ்சன் கோகய் தலைமையிலான அமர்வு முடிவு செய்தது. மேலும் வரும் ஜனவரி மாதம் 22-ஆம் நாள் முதல் சீராய்வு மனுக்கள் மீது விசாரணை நடைபெறும் என்றும் அறிவித்துள்ளனர்.



இதனையடுத்து சபரிமலை செல்வதற்கு ஆண்களும், பெண்களுமாய் ஆன்லைன் மூலம் விண்ணப்பித்து வருகின்றனர். இந்நிலையில், கடந்த வாரம் திருநங்கைகள் 4 பேர் சபரிமலைக்கு தரிசனம் செய்ய முயன்றபோது காவல்துறையினரால் தடுக்கப்பட்டனர். இதன் பின்னர் உயர் நீதிமன்ற குழுவினர் முறையிட்டதையடுத்து, பலத்த பாதுகாப்புடன் திருநங்கைகள் 4 பேரும் மறுநாள் தரிசனம் செய்தனர்.



இந்நிலையில் சென்னையைச் சேர்ந்த “மனிதி” எனும் பெண்கள் நல அமைப்பின் ஒருங்கிணைப்பாளர் செல்வி தலைமையில் 50 வயதுக்குட்பட்ட பெண்கள் 11 பேர் சபரிமலைக்கு நேற்று பயணம் மேற்கொண்டனர். சென்னையில் இருந்து தமிழக எல்லையான கம்பம்மேடு, இடுக்கி வழியாகப் பம்பைக்கு இன்று காலை 3.30 மணியளவில் இந்த குழு சென்றுள்ளது. இக்குழுவின் வருகையினை அறிந்த கேரள இந்து அமைப்பினர் கோட்டயம் ரயில் நிலையத்தில் இரவு முழுவதும் காத்திருந்து, “மனிதி” குழுவினரை தடுக்கும் முயற்சியில் ஈடுபட்டனர்.


இதுகுறித்து விவரம் அறிந்த காவல்துறையினர், பம்பையில் “மனிதி” குழுவினரை நிறுத்தி பேச்சு வார்த்தையில் ஈடுபட்டு அவர்களை திரும்பிச் செல்லுமாறு கூறியுள்ளனர். ஆனால், உச்ச நீதிமன்ற தீர்ப்பைச் சுட்டிக்காட்டி, மனிதி அமைப்பின் ஒருங்கிணைப்பாளர் செல்வி, சாமி தரிசனம் செய்யாமல் திரும்பமாட்டோம் என்று தெரிவித்துள்ளனர். இதன் காரணமாக இப்பகுதியில் பதற்றம் அதிகமாகியுள்ளது.


பயணம் மேற்கொண்டுள்ள “மனிதி” குழுவில் 8 பேர் முறைப்படி விரதம் இருந்து இருமுடி கட்டிச் சென்றுள்ளதாகக் கூறப்படுகிறது. மேலும், தமிழக பெண்களை தவிர கேரளா, மத்தியப் பிரதேசம், ஒடிசா ஆகிய மாநிலங்களைச் சேர்ந்த பெண்களும் இந்த குழுவில் இணைந்து சென்றுள்ளதாக தெரிகிறது.