கர்நாடக முதல்வர் குமாரசாமியின் பதவியேற்பு விழாவில் கலந்துகொண்டுள்ள எதிர்க்கட்சித் தலைவர்கள் அனைவரும் தூத்துக்குடி போராட்டத்தில் கலந்துகொள்ளுமாறு ஜிக்னேஷ் மேவானி வேண்டுகோள் விடுத்துள்ளார். 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

தூத்துக்குடியில் ஸ்டெர்லைட்டுக்கு எதிரான போராட்டத்தில் காவல்துறை நடத்திய துப்பாக்கி சூட்டில் 13 பேர் உயிரிழந்தனர். இதன் காரணமாக அப்பகுதியில் தொடர்ந்து பதற்றமான சூழல் நிலவி வருகிறது. இப்போராட்டத்தின்போது, நடத்தப்பட்ட காவல்துறையினரின் தடியடி, துப்பாக்கிச் சூடு, வாகனங்கள் எரிப்பு ஆகிய காட்சிகள் வாட்ஸ் அப், பேஸ்புக் உள்ளிட்ட சமூக வளைதளங்களின் மூலம் உடனடியாக பரவி வருகின்றன. 


இந்நிலையில், நேற்று கர்நாடக முதல்வர் பதவியேற்பு விழா நடைபெற்றது. கர்நாடகாவில் ம.ஜ.த கட்சியின் தலைவர் குமாரசாமி முதல்வராகப் பதவியேற்ற விழாவில் பா.ஜ.க அல்லாத அனைத்து எதிர்க்கட்சித் தலைவர்களும் கலந்துகொண்டனர். அனைத்துத் தலைவர்களும் ஒரே மேடையில் இருந்தது நீண்ட நாள்களுக்குப் பிறகு இந்திய அரசியலில் நடந்த ஒரு சிறப்பான நிகழ்வாகக் கருதப்பட்டது. 


இந்த இரு சம்பவங்களையும் இணைத்து குஜராத் எம்.எல்.ஏ ஜிகேஷ் மேவானி எதிர்க்கட்சி தலைவர்களுக்கு ஒரு வேண்டுகோள் விடுத்து தனது ட்விட்டர் பக்கத்தில் கருத்து வெளியிட்டுள்ளார். அதில், ``குமாரசுவாமி  பதவியேற்பு விழாவில் ஏதேச்சாதிகார பா.ஜ.க-வுக்கு எதிராக ஒன்று கூடிய அனைத்து எதிர்க்கட்சித் தலைவர்களும் தூத்துக்குடி ஸ்டெர்லைட் துப்பாக்கிச்சூட்டில் பாதிக்கப்பட்ட மக்களை நேரில் சந்தித்து அவர்களது போராட்டத்தில் பங்குகொள்ளுமாறு அன்புடன் வேண்டிக்கொள்கிறேன்.” என அவர் பதிவிட்டுள்ளார்.