இந்திய முப்படைகளின் தலைமை தளபதி ஜெனரல் பிபின் ராவத் இன்று தமிழகத்தின் குன்னூர் அருகே ஏற்பட்ட ஹெலிகாப்டர் விபத்தில் மரணமடைந்தார். நீலகிரி மலைப்பகுதியில் அமைந்துள்ள வெலிங்டன் பாதுகாப்பு சேவை பயிற்சி கல்லூரியில் பயிற்றுநர்களுக்கும், பயிலும் மாணவர்களுக்கும் உத்வேகம் அளிக்கும் வகையில் அங்கு அவர் இன்று உரையாற்ற இருந்தார்.   இன்று மதியம் இந்திய விமானப்படையின் எம் ஐ 17 வி 5 ஹெலிகாப்டரில் அதை இயக்கும் 4 படை வீரர்கள், 9 படைப்பிரிவை சேர்ந்த இதர வீரர்கள் ஆகியோருடன் பயணித்த முப்படை தலைமை தளபதி குன்னூர் அருகே இந்த துரதிர்ஷ்டவசமான விபத்தில் சிக்கினார்.  இந்த விபத்தில் ஜெனரல் பிபின் ராவத் அவர்களின் துணைவியார் மதுலிகா ராவத்தும் உயிரிழந்தார். அவருடன் பயணித்த 11 படை வீரர்களும் உயிரிழந்ததாக அங்கிருந்து வரும் தகவல்கள் உறுதி செய்துள்ளன. இந்த விபத்தில் படுகாயமடைந்த குரூப் கேப்டன் வருண்சிங் வெலிங்டன் ராணுவ மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். இவர் விமானப்படையில் ஆற்றிய வீர தீர செயல்களுக்காக ’செளரிய சக்ரா’ விருதை பெற்றவர்.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

ALSO READ | ஹெலிகாப்டர் விபத்தில் காயமடைந்தவர்களுக்கு உரிய சிகிச்சை: மாவட்ட ஆட்சியருக்கு முதல்வர் உத்தரவு


இந்த துயர சம்பவம் குறித்து குடியரசு தலைவர் திரு. ராம்நாத் கோவிந்த் வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில், ஜெனரல் பிபின் ராவத் மற்றும் அவரது துணைவியார் மதுலிகா ராவத் அகால மரணம் அடைந்த தகவல் அறிந்து அதிர்ச்சியும் துயரமும் அடைந்தேன். நாட்டின் வீரம் செறிந்த புதல்வனை இந்த தேசம் இழந்திருக்கிறது. 40 ஆண்டுகளாக சாதனைகளாலும், பராக்கிரமத்தாலும் நிறைந்திருந்த தனது தாய்நாட்டிற்கான தன்னலமற்ற சேவையால் அவரது பணி அமைந்திருந்தது. அவரது குடும்பத்திற்கு ஆழ்ந்த இரங்கல். 



குடியரசு துணைத் தலைவர் திரு. வெங்கையா நாயுடு வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில், முப்படைகளின் தலைமை தளபதி ஜெனரல் பிபின் ராவத் அவரது துணைவியார் திருமதி. மதுலிகா ராவத், படைப்பிரிவின் உயரதிகாரிகள் மற்றும் ஹெலிகாப்டரை இயக்கிய வீரர்கள் உள்ளிட்டோர் தமிழகத்தில் குன்னூர் அருகே ஏற்பட்ட விபத்தில் உயிரிழந்த தகவலறிந்து அதிர்ச்சியும், வருத்தமும் அடைந்தேன், என்று தெரிவித்துள்ளார். 


பிரதமர் திரு. நரேந்திரமோடி அவர்களின் இரங்கல் செய்தியில், ஜெனரல் பிபின் ராவத் ஒரு தன்னிகரற்ற போர் வீரர்.  உண்மையான தேச பக்தர், நமது படைகளையும், பாதுகாப்பு உபகரணங்களையும் அதிநவீனப்படுத்துவதில் பெரும் பங்கு வகித்தார்.   நாட்டிற்காக அவர்கள் உச்சபட்ச சிரத்தையுடன் சேவையாற்றினார்கள் என்றும் தெரிவித்துள்ள அவர் உயிரிழந்தோரின் குடும்பத்தினருக்கு தமது ஆழ்ந்த இரங்கலை சமர்ப்பித்துள்ளார். 



இந்த துயர சம்பவம் குறித்து தனது இரங்கல்களை தெரிவித்துக் கொண்டுள்ள மத்திய உள்துறை அமைச்சர் திரு அமித் ஷா, முப்படைகளின் தலைமை தளபதியாக திகழ்ந்த ஜெனரல் பிபின் ராவத் ஒரு சொல்லொண்ணா துயர விபத்தில் உயிரிழந்த மிக சோகமான தினமாக நமது தேசத்திற்கு இன்றைய தினம் அமைந்து விட்டது. இந்த ஈடுசெய்ய முடியாத இழப்பை தாங்கும் வலிமையை அவர்களது குடும்பத்தினருக்கு இறைவன் வழங்கட்டும்.  . 


முப்படைகளின் தலைமை தளபதி மறைவுக்கு இரங்கல் தெரிவித்துள்ள பாதுகாப்பு அமைச்சர் திரு. ராஜ்நாத்சிங், பிபின் ராவத் அகால மரணம் நாட்டிற்கும், பாதுகாப்பு படைகளுக்கும் ஏற்பட்ட ஈடுசெய்ய முடியாத இழப்பு என்று தெரிவித்துள்ளார். முப்படைகளின் முதல் தலைமை தளபதியாக பொறுப்பேற்றிருந்த அவர், பாதுகாப்பு படைகளின் ஒருங்கிணைந்த செயல்பாடு குறித்து பல்வேறு திட்டங்களை வகுத்தவர் என்று புகழாரம் சூட்டியுள்ளார்.  மேலும், மத்திய தகவல் ஒலிபரப்பு அமைச்சர், மத்திய தகவல் ஒலிபரப்பு இணையமைச்சர், தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை, அதிமுக கட்சி ஆகியோர் தங்களது இரங்களை தெரிவித்துள்ளனர்.  


ALSO READ | IAF Helicopter Crash: முப்படை தளபதி பிபின் ராவத் மற்றும் அவரது மனைவி உயிரிழப்பு


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.


முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூகம், வேலைவாய்ப்பு என உள்ளூர் முதல் உலகம் முழுவதும் அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் வாசிக்க, இப்போதே ஜீ இந்துஸ்தான் பயன்பாட்டைப் பதிவிறக்குங்கள்.


Android Link: https://bit.ly/3hDyh4G


Apple Link: https://apple.co/3loQYeR